குறிப்பும் முன்னொழுக்கமும் என்ற
பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் "அகநாழிகை"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த
அன்பர்கள் அ.மு.செய்யதுவும்,
அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்.
நிலாரசிகனின் "சங்கமித்திரை" என்னும் கதையும், நண்பர்
உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயக
முருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.
"அமுதமும் அமைதியும்" என்ற பாவண்ணனின் கட்டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு.
அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. "காலச்சுவடு" கண்ணன் மற்றும் "உயிர் எழுத்து" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
***************
அவர் ஒரு பிரபல பதிவர். சுவாரசியமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறாரோ என்பது அவரைப் பற்றிய என் எண்ணமாக இருந்தது. ஆனால் என்னுடைய அத்தனை கணிப்புகளையும் எங்களுடைய முதல் சந்திப்பே தூள் தூளாக்கி விட்டது. அத்தனை எளிமையாக, இனிமையாகப் பழகினார். இப்படி கதம்பமாக எழுதும் பதிவுக்கு "உக்கார்ந்து யோசிச்சது" என்று பெயர் வரக் காரணமும் அவர்தான். அவர் -
கார்க்கி. இலக்கியம், இசை, சினிமா என்று ஒரு சில விஷயங்களைப் பற்றி பேசிக்
கொண்டிருந்தோம். எங்களுக்குள் பல
விஷயங்களில் ஒத்த கருத்து இருக்கிறது, ஒன்றைத் தவிர (ஹி ஹி ஹி.. அது என்னன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்..). நான் அவரிடம் சொன்னது இதுதான். "தல,
தளபதி பற்றிய என்னுடைய ரசனையும், உங்களுடைய ரசனையும் வெவ்வேறாக இருந்தாலும் நாம் நண்பர்கள்.. அதுதானே சகா முக்கியம். ." கொஞ்ச நேரமே பேச முடிந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி சகா..
***************
நண்பனை கமுதிக்கு வண்டி ஏற்றி விடுவதற்காக ஆரப்பாளையம் வரை போயிருந்தேன். பேருந்தில் அவன் அமர்ந்த சீட்டிற்குப் பின் ஒரு இளம்பெண்ணும், சிறு குழந்தையும் (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்) உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கணவர் வெளியே ஜன்னலின் அருகே நின்று கொண்டிருந்தார். வண்டி கிளம்பப் போகையில் அந்த குழந்தை மழலை மொழியில் திடீரெனப் பேசினாள்.
"ஏ யப்பா.. நானும் அம்மாவும் ஊரில இல்லைன்னு ரொம்ப ஊரு சுத்தாத.. வெளியில எல்லாம் மம்மு சாப்பிடாத.. அம்மா நூடுல்ஸ் வாங்கி வச்சிருக்கு.. அத மட்டும் சாப்பிடு.. வேற ஏதாவது வேணும்னா பக்கத்து வீட்டு யச்சுமி பாட்டிக்கிட்ட வாங்கிக்கோ.. ஏதாவது தப்பு பண்ணின..
தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவேன்.."
பக்கத்தில் நின்று கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்து விட்டேன். அந்த ஆளுக்கு அவமானமாகப் போய் விட்டது போலும்.
"ஏண்டி, பிள்ளைக்கு இப்பவே டிரைனிங் கொடுக்குறியா" என்று மனைவியின் மீது பாய்ந்தார்.
அதற்குள் பஸ் கிளம்பி விட, நானும் எஸ்கேப் மாமு எஸ்கேப்.
***************
மழை ஓய்ந்தும் தூவானம் விடாத கதையாக, ஈரோடு
சங்கமத்தில் விருந்து முடிந்த பின்னும் மக்கள் செம கூத்தடித்து இருக்கிறார்கள். கேபிள் அண்ணன், தண்டோரா, அப்துல்லா அண்ணன், பரிசல், வெயிலான் என்று ஒரு செம ஜமா ஓடியிருக்கிறது. சீக்கிரமாகக் கிளம்பியதால் அநியாயத்துக்கு மிஸ் பண்ணி விட்டேன். அவர்கள் ஆடிய ஆட்டத்தின்
சில காட்சிகளை ஈரவெங்காயம் தொகுத்திருக்கிறார். ரகளைகளைப் பார்க்க,
இங்கே க்ளிக்குங்க..
***************
ஹாலிவுட்டில் அவ்வப்போது Hot Shots, Epic Movie, Superhero Movie என்று தங்களைத் தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் வண்ணம் படமெடுப்பார்கள். தமிழில் இதுபோன்ற முயற்சிகள் ரொம்பக் குறைவே. சத்யராஜும், விவேக்கும் ஒரு சில காட்சிகளில் இதை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முழு நீளப்படம் (கவனியுங்கள்.. நீலப்படம் அல்ல), தமிழ் சினிமாவைக் கிண்டல் செய்து வந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்திருக்கிறது தயாநிதி அழகிரியின் "தமிழ் படம்". சிவாஜி, பில்லா, நாயகன் என்று எல்லா படத்தையும் சகட்டுமேனிக்கு ஓட்டுகிறார்கள். டிரைலரே அசத்துகிறது. அதேபோல எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கும் இன்னொரு படம் "ஆயிரத்தில் ஒருவன்".செல்வராகவன் பட்டையைக் கிளப்பி இருப்பார் என்று நம்புகிறேன். (ஏன்யா டிரைலருக்கு எல்லாம் ஆளாளுக்கு விமர்சனம் போடுறீங்க.. கொஞ்சம் ஓவரா இல்ல?) "King Solomon's Mines" ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அது என்ன இங்கிலீஷ் படம், அது பற்றி ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்பவர்கள் போகவேண்டிய இடம் அண்ணன்
ஹாலிவுட்பாலாவினுடைய தளம்.
***************
ஒரு பொன்மொழிஉங்களுக்குப் பிடித்த நாயகனின் படம் நன்றாக ஓடுகிறது என்ற செய்தியைக் காட்டிலும், எதிராளி நடிகனின் படம் ஊத்திக்கொண்டது என்கின்ற செய்தி பல மடங்கு சந்தோஷத்தை தரக்கூடியது-
ஸ்ரீலஸ்ரீஅஜால்குஜால் கார்த்திகேயானந்தா...***************
இன்று கிருஸ்துமஸ் நன்னாள்.
இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்க்கையில்
நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான தேவைகள் ரொம்பவே அதிகம். பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் வீட்டில் கூடவும், நண்பர்களுடன் தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் எல்லா பண்டிகைகளையும் நான் ரொம்பவே விரும்புகிறவன். எனவே.. கேக் எடு.. கொண்டாடு.
பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))