December 18, 2009

அவதார் - திரைப்பார்வை..!!!



உலகிலேயே மிகவும் அதிகமான வசூலைக் கொடுத்த படத்தின் இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தை வெளியிட பனிரெண்டு வருடங்கள் எடுத்துக் கொள்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஜேம்ஸ் கேமரூனின் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. 1998இல் வெளிவந்த "டைட்டானிக்" என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து 2009இல் வெளிவந்திருக்கும் படம்தான் "அவதார்". இன்று வரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். பிரமாண்டம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தேடுபவர்கள் இந்தப் படத்தை பார்த்தால் போதும். நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்து கேட்டு வந்திருக்கும் அம்புலிமாமா டைப் கதைதான். ஆனால் மேகிங்கில் பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.



பொதுவாக இது போன்ற அயல்கிரகவாசிகள் படங்கள் என்றாலே ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் கதை வைத்திருப்பார்கள். பூமியில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். அவர்களை ஆக்கிரமிக்க வரும் கேட்ட ஏலியன்கள். அப்புறம் ஒரு தலைவன் (பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி) வருவான். மக்களுக்காக போராடி ஜெயிப்பான். "அவதாரில்" சின்ன மாற்றம். இங்கே ஏலியன்கள் நல்லவர்கள். பூமி மனிதர்கள் அவர்களை அழிக்க நினைக்கிறார்கள். கடைசியில் மனிதர்களில் இருக்கும் நல்லவன் ஒருவன் அவர்களைக் காப்பாற்றுகிறான்.



வினோதமான ஒரு வேற்றுகிரகம் பேண்டோரா. அங்கே "நவி" என்கின்ற இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மனித DNA மற்றும் நவி இன DNA இரண்டையும் இணைத்து உருவாக்கப்படும் ஜந்துதான் அவதார். நவி இனத்தைப் போன்ற உடம்பு. ஆனால் மனித மூளையால் இயங்குகிறது (மாட்ரிக்ஸ் ஞாபகம் இருக்கிறதா.. அதே மாதிரி..). கால்கள் செயலிழந்த கதாநாயகன் ஜேக் அவதாராக மாறி நவி இன மக்களுடன் பழகுகிறார். நவி இளவரசியுடன் காதல் கொள்ளுகிறார். அவர்களில் ஒருவனாகவே மாறிப் போகிறார். உண்மையில் மனிதர்களின் குறி - பேண்டோரா கிரகத்தின் கனிம வளம். ரோபோக்களின் துணையோடு நவி இனத்தையே அழிக்க முற்படுகிறார்கள். இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பு ஜேக்கிடம் இருக்கிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் அவதார் படத்தின் கதை.



கண்கொள்ளாக் காட்சி என்று சொல்வோமில்லையா.. இந்த மொத்தப் படமுமே அப்படித்தான் இருக்கிறது. இத்தனைக்கும் நான் இந்தப் படத்தை 2 -Dயில் தான் பார்த்தேன். கால்கள் படும் இடமெல்லாம் பச்சை படர்ந்து செல்லும் சாலைகள், தொட்டவுடன் சுருங்கிக் கொள்ளும் அழகான பெரிய மலர்கள், அந்தரத்தில் தொங்கும் மலைகள், பறக்கும் டிராகன்கள், வித விதமான மிருகங்கள், ஒற்றை மரத்தின் ஊடாக பறந்து கிடக்கும் கிளைகள், சரிந்து விழும் அருவி என காட்சிகள் எல்லாமே விஷுவல் ட்ரீட். ஏதோ ஒரு கனவுலகத்தில் நுழைந்ததைப் போன்ற உணர்வு. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இந்தப் படத்துக்காகவே புதிதாக ஒரு கேமராவைக் கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தாலும் கிராபிக்ஸ் செய்ய மட்டும் நான்கு வருடங்கள் ஆனதாம். நவி இன மக்கள் பேசுவதற்காகவே புதிதாக ஒரு மொழியை உருவாக்கி இருக்கிறார்கள்.




நடித்து இருப்பவர்கள் எல்லாமே நன்றாக செய்து இருக்கிறார்கள். குறிப்பாக நாயகியாக வரும் அந்தப் பெண் உண்மையில் எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க ஆசையாகஇருக்கிறது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒப்பனை - நீண்ட வால், நீளமான முடி, ஏழடி உயரம், நீல நிறம் என்று பார்க்க அழகாக(?!) இருக்கிறார்கள் நவி இன மக்கள். ஒளிப்பதிவு -சான்சே இல்லை. கடைசியாக பின்னணி இசை. மூன்று துறைகளிலுமே இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் என நம்புகிறேன் (கூடவே விஷுவல் எபெக்ட்சுக்கும்).



படத்தின் பலவீனம் என்று சொன்னால், ஏற்கனவே ஒரு சில படங்களில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் வருவதுதான். அடுத்தது இதுதான் நடக்கப் போகிறது என்று யார் வேண்டுமானாலும் சொல்லாம். கடைசி சண்டையில் மிருகங்கள் வந்து உதவுவதும் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இது எதுவுமே படம் பார்க்கும்போது நமக்கு தோன்றாமல் இருப்பதுதான் இயக்குனருக்கு வெற்றி. ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியா மீது நிறையவே காதல் உண்டு. டைட்டானிக் கூட ஒரு ஏழை-பணக்காரி காதல் என்ற நம்மூர் மசாலாதான். அதைப் போலவே நம்மூர் புராணக் கதைகளையும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தி இருப்பார் போல. நவிக்களின் நீல நிறம், அவதார் என்று பெயர் என நிறையவே இந்தியத்தனம். ஆக மொத்தத்தில் நம் எல்லார் உள்ளேயும் இருக்கும் குழந்தைக்கு செமத்தியான தீனி தரும் கனவுப்படம்.

அவதார் - அட்டகாசம்

(படம் பற்றிய மிரட்டலான டெக்னிக்கல் தகவல்களுக்கு இங்கே சுட்டுங்கள்..)

18 comments:

பாலா said...

//கடைசி சண்டையில் மிருகங்கள் வந்து உதவுவதும் கொஞ்சம் ஓவர்தான். //

இந்த மாதிரி நாம கேட்போம்னு தானே... அதுக்கு முன்னாடியே... டயலாகெல்லாம் சொல்லிடுறாங்க! :)

Rajan said...

அவதாரம்னு ஒரு நாசர் படம் வந்துச்சே அதோட ரீமேக்கா இருக்குமோ !

பிரபாகர் said...

விமர்சனம் ரொம்ப நல்லாருக்கு நண்பா... நாளைதான் பார்க்க்ப்போகிறேன்...

பிரபாகர்.

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம்

துபாய் ராஜா said...

நல்லதொரு விமர்சனப்பகிர்வு. வேட்டைக்காரன் வேட்டை எப்போ... :))

Anonymous said...

பொதுவா எனக்கு தமிழ் படமே புரியாத நிலையில் இந்த மாதிரி படங்கள் சுத்தமா புரியாது படம் பார்க்கும் சிரமத்தை குறைச்சிட்டீங்க பாண்டியன்...ஹிஹிஹி ஓசியில படம் பார்க்க மன்னிக்கவும் படிக்க கசக்குமா என்ன?

Prabhu said...

பொதுவாக இது போன்ற அயல்கிரகவாசிகள் படங்கள் என்றாலே ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் கதை வைத்திருப்பார்கள்.///
இது இன்னொரு டெம்ப்ளேட் வாத்தியாரே! இந்த மிஷினரிஸ், கம்பெனிகள் போய் தெனமெரிக்க நாடுகளைப் ஆக்கிரமிச்சதும் இதே மாதிரியான செட்டப் தான்.

நீங்க சொன்ன மசால மேட்டர் கரெக்ட். டைட்டானிக்கில் ஹீரோ சாகலைனா படம் என்ன ஆகிருக்கும்? மசாலா....

//
இந்த மாதிரி நாம கேட்போம்னு தானே... அதுக்கு முன்னாடியே... டயலாகெல்லாம் சொல்லிடுறாங்க! :)///
இதுக்கும் தேவர் பிலிம்ஸ் நாய்க்கும் என்னய்யா வித்தியாசம். அவனுங்க எடுத்தா மட்டும் வாயப் பிளந்து பாக்குறோம். :)

சம்பத் said...

நல்ல விமர்சனம்

Balakumar Vijayaraman said...

விமர்சனம், படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

க.பாலாசி said...

உங்களின் விமர்சனப்பார்வையும் நன்றாக இருக்கிறது.

K.S.Muthubalakrishnan said...

Good review

cheena (சீனா) said...

நல்லதொரு திரைப்பட விமர்சனம்

நல்வாழ்த்துகள் கா.பா

TamilRadios said...

உங்கள் விமர்சனத்தை படித்து, அந்த படத்தை பார்க்கும் ஆவல் அதிகமாகி விட்டது.

Anonymous said...

நல்ல விமர்சனம்

காரணம் ஆயிரம்™ said...

இந்த படத்தின் ஃப்ளோரஸண்ட் காடுகள் ரொம்ப பிரபலம்.. 3-டி எஃபெக்டில் பார்க்க ஆசை.. சென்னையில், 3டி கண்ணாடி மட்டும் எங்கே கிடைக்கும்??? ;-)

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

சீனு said...

நல்ல விமர்சனம்.

http://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html

Anonymous said...

நல்ல விமர்சனம்

Anonymous said...

http://www.youtube.com/watch?v=xq_nRfoBSm0