March 29, 2011

ஒரு கனவின் கதை

அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது. மெதுமெதுவாக அந்த வாசம் தனக்குள் நுழைந்து நெஞ்சம் நிறைப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. மாறாக அவன் அந்த வாசத்தை பெரிதும் விரும்புபவனாக தன்னையும் அறியாமல் மேலும் ஆழமாக மூச்சை இழுத்து உள்வாங்கத் துவங்கினான். ஒரு கட்டத்தில் காற்றால் முழுக்க நிரம்பிய நெஞ்சுக்கூட்டில் வேறேதும் இடமில்லாமல் போக அவன் ப்ஹா என்று அலறியபடியே கண்கள் விழித்து எழுந்தான். அவன் வாழ்வின் அதிர்ச்சி அங்கே அவனுக்காக காத்து இருந்தது.

முந்தைய தினத்தின் இரவில் தன் படுக்கையில் வீழ்ந்து கிடந்த அவன் இப்போது ஒரு வனத்தின் பெரிய மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தான். எங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது. அது என்ன இடம் என்பது வனுக்கு மிகப்பெரும் குழப்பமாகவும் ஏதும் புரியாமலும் இருந்தது. தான் எப்படி அங்கே வந்திருக்க முடியும் அது சாத்தியமே இல்லை இது வெறும் பிரம்மை எனவும் தான் காணும் கனவெனவும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அந்தக் கனவிலிருந்து வெளியேற விரும்பியவனாக கண்களை மூடி அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டவன் இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு உறங்க முயற்சித்தான்.

இத்தனை நேரமாக அவனை இம்சித்துக் கொண்டிருந்த வாசனை சுத்தமாக காணாமல் போயிருந்தது அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. கண்கள் இறுக மூடியபடியே விடிந்து விட வேண்டுமென எதிர்பார்த்துக் கிடந்தான். சிறிது நேரம் கழித்து எங்கோ தொலைவில் யாரோ அழும் ஓசை கேட்கத் தொடங்கியது. ஒரு சிறுகுழந்தையின் குரலை ஒத்த அந்த அழுகை இப்போது மெதுவாக காற்றோடு ஊர்ந்து வந்து அவனருகே சப்பணமிட்டு அமர்ந்து கொண்டது. நேரம் ஆக ஆக அந்த ஒலி இரண்டாக பத்தாக நூறாக பல்கிப்பெருகி அவனை பெரும்பாரமென அழுத்தத் துவங்கியது. நாராசம் தாங்காமல் அவன் கண்கள் திறவாமலே காதுகளை இறுகப் பொத்திக் கண்டான். இன்னும் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தைகளின் ஒலி பூனைகளின் சத்தமாக மாறி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அலறலை இதற்கு மேலும் தாங்க முடியாதெனும் கணத்தில் அவன் அலறியபடி எழுந்து திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.

அந்தக்காட்டில் எந்தப்பக்கம் போவதென அவன் அறிந்திருக்க வில்லை. எங்கு பார்த்தாலும் பெரிதாக கிளைகள் விரித்து நின்ற மரங்கள் அடர்த்தியாய் இருக்க பாதை தேடி ஓடுவதென மிகவும் கடினமாக இருந்தது. பூமியில் அழுந்தப் பதிந்திருந்த வேர்கள் தடுக்கி கீழே விழுந்த சிராய்ப்புகள் வந்தது எதையும் அவன் பொருட்படுத்தவேயில்லை. எந்த வாசனையும் குரலும் தன்னை தீண்ட முடியாதவொரு இடத்துக்குப் போய் விட வேண்டுமென்பதே அவனுடைய ஒரே எண்ணம். திரும்பிப் பார்க்காமல் ஓடியபடியே இருந்தான். எத்தனை நேரம் ஓடினோம் என்றோ எத்தனை தூரம் வந்திருப்போம் என்பதோ தெரியாமல் மூச்சிரைத்து அவன் இறுதியாக பிசாசென நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் வந்து நின்றான். தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத பீதி அவனுக்குள் ஒரு கசப்பையும் பயத்தையும் சுரக்கச் செய்திருந்தது.

தான் மட்டும்தான் அந்தக்காட்டில் இருக்கிறோமோ இல்லை வேறு ஏதேனும் மனிதர்களோ மிருகங்கள் உண்டா இது என்ன மாதிரியான இடம் உண்மையா மாயமா என அவனுக்கு சந்தேகமாக இருந்தது. கடவுள்கள் மீதோ மாயங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத அவனிடம் யாரேனும் உனக்கு இப்படி நடக்கக் கூடும் என்று முன்னரே சொல்லியிருந்தால் அவன் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். ஆனால் இன்று அவனிருக்கும் நிலை கண்டு அவனுக்கு ஆச்சரியமாகவும் இன்னொரு புறம் அழுகையாகவும் இருந்தது. அடுத்து தான் செய்ய வேண்டுவது என்ன என்பதோ இந்த மாயக்காட்டில் இருந்தோ அல்லது கனவில் இருந்தோ எப்படி வெளியேறுவது என்பதை அறியாமல் திகைத்துப் போய் செயலற்றவனாக நின்று கொண்டிருந்தான்.

அந்த வேளையில் அவன் முதுகுக்குப் பின்னால் அந்த சத்தம் கேட்டது. மெதுவாக திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கிருந்த புதருக்குள் இருந்து வெளியேறி அவர்கள் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். குறைந்தது பதினைந்து பேர்களாவது இருப்பார்கள். வெகு வினோதமாக கற்கால மனிதர்கள் போல் உடையணிந்து இருந்த அவர்களை அவன் இதற்கு முன்னமே எங்கோ பார்த்திருந்த ஞாபகம் இருந்தது. தன் நினைவுகளின் அடுக்குகளில் தேடிப் பார்த்தவன் திக்பிரம்மை அடைந்தவன் போலானான். அவர்கள் எல்லோருமே அவனுடைய வெகு நெருக்கமான நண்பர்கள்.

சிறுவயது தோழர்கள் முதல் கல்லூரி நண்பர்கள்வரை இவன் வெகுவாக நேசித்த பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் பயங்கரமான வெறி இருந்தது. அனைவருமே தங்கள் கைகளில் ஏதேதோ ஆயுதங்களைத் தாங்கியபடி இவனை நோக்கி முன்னேறி வந்தார்கள். யாரிடமும் இவனை அடையாளம் கண்டுகொண்டதற்கான சுவடே இல்லை மாறாக அடித்துக் கொல்லும் வெறியே இருந்தது. இவன் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அலறினான். அதைக் கண்டுகொள்ளாமல் முகங்கள் எல்லாம் கல்லாக இறுகிப் போயிருந்த அவர்கள் இவனை நோக்கி முன்னேறுவதிலேயே குறியாக இருந்தனர். அவர்கள் கையில் அகப்பட்டால் கண்டிப்பாகத் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்தவனாக அவன் மீண்டும் ஓடத் தொடங்கினான்.

திரும்பி திரும்பி பார்த்தபடி வெகு நேரம் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தவனின் கண்களில் சட்டென்று அந்த ஒளி தட்டுப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டதற்கான அந்த அடையாளம் அவனுக்கு ரொம்ப ஆதரவாக இருந்தது. அங்கு சென்றுவிட்டால் யாரேனும் மனிதர்கள் இருக்கலாம் எனவும் அவர்கள் உதவியோடு இங்கிருந்து தப்பிவிடலாம் என்றும் அவன் நம்பி நெருப்பை நோக்கி ஓடத் தொடங்கினான். இன்னும் இருபதடி போனால் அந்த நெருப்பை அடைந்து விடலாம் எனும் சூழலில் அவன் கால்கள் தேய்த்து நின்றான். எதிர்பாரா பல கஷ்டங்களைத் தந்திருந்த அந்த இரவு அவனுக்குள் நிறையவே எச்சரிக்கை உணர்வை உருவாக்கி இருந்தது. நெருப்பை நெருங்குமுன் அங்கிருப்பவர்கள் யாரெனத் தெரிந்து கொள்ள விரும்பியவனாக ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டு கவனிக்கத் தொடங்கினான்.

சிலுவை வடிவிலிருந்த ஒரு மரக்கட்டை தரையில் நடப்பட்டு தீப்பந்தம் போல கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி சில மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாருமே முகத்திலிருந்து கால்வரை மூடிய ஒரு நீள அங்கியை அணிந்து இருந்தார்கள்.அதைப் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்குத் தான் மேற்கத்தைய காமிக்ஸுகளில் படித்திருந்த குக்ளாஸ்க்ளான் இயக்கத்தின் நினைவு வந்தது. குழம்பியவனாக அவர்களை பார்த்தபடி இருந்தான். அந்தக் கூட்டத்தின் தலைவன் போல இருந்தவன் சிறிது நேரம் கழித்து தலையசைக்க யாரோ ஒருவனை சிலர் கைகள் கட்டி இழுத்து வந்தார்கள். நெருப்பு வெளிச்சத்தில் முகம் மூடாமலிருந்த அவன் யாரெனப் பார்க்க இவன் முயற்சித்தவன் அவர்கள் அழைத்து வந்தது இவனைத்தான் என அடையாளம் தெரிந்தபோது மிரண்டு போனான்.

இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தான் எப்படி அவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது தான் தானா இல்லை தன்னைப் போலவே வேறாருமா என சந்தேகமும் பீதியும் அவனை சூழ்ந்து கொண்டன. முகத்தில் சிரிப்போடும் கொலைவெறி கும்பலிடம் மாட்டியிருக்கிறோமே என்ற பயமும் சிறிதுமில்லாத அவன் யாராக இருக்கக் கூடும் என இவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் இவனைக் கண்டு கொண்டான். அதோ நான் அங்கிருக்கிறேன் என்னைத் தப்ப விடாதீர்கள் பிடியுங்கள் என்னைப் பிடியுங்கள் எனத் தொடர்ச்சியாக கத்த ஆரம்பித்த அவன் குரல் கேட்டு இவன்பக்கம் திரும்பிய அவர்களைக் கண்டு அரண்டுபோய் இவன் வேறொரு திசையில் ஓடத் தொடங்கினான்.

முடிவு 1:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். எத்தனை நேரம் அப்படி கிடந்திருப்பான் எனத் தெரியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது.

முடிவு 2:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து மெதுவாக அந்த மரம் தன் கிளைகளை இறக்கி அவனைத் தூக்கிக் கொண்டது. உயர்ந்து வளந்திருந்த அதன் நடுமரம் சட்டெனப் பிளந்து கொள்ள கர்ப்ப சிசு போல மெதுவாக அவனை உள்ளிறுத்தி தன் பிளவை மூடிக் கொண்டது. எங்கும் நிசப்தம். மறுநாள் காலையில் அவன் அம்மா அவனுடைய அறையைத் திறந்தபோது அவனுடைய படுக்கையின் மேல் சில இலைகள் மட்டுமே கிடந்தன.

முடிவு 3:

இந்தக் கதை உங்களுடையதாகக் கூட இருக்கும் பட்சத்தில் இதற்கான முடிவை நீங்களே எனக்குச் சொல்லலாம்.


9 comments:

Shanmugam Rajamanickam said...

ரொம்ப நல்ல இருக்கு.
முடிவு: என்னுடைய முடிவுதான்.

நேசமித்ரன். said...

நல்ல முயற்சி :)

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆர்.சண்முகம்
முடிவுன்னு எதுவுமே சொல்லலையே நண்பா..

நேசமித்ரன்
நன்றி தலைவரே..:-))

மேவி... said...

நல்ல முயற்சி தான் ..ஆனால் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை எனக்கு தரவில்லை

மதன் said...

அப்படி ஓடிக்கொண்டிருந்த பொழுது ஒரு நீர்நிலையில் எந்த சலனமுமின்றி அந்த படகு நின்றிருந்தது, இந்த வாசனையின் பிடியில் இருந்து தப்ப இப்படகில் இருந்து தப்பலாம் என எண்ணி அப்படகில் சடுதி நேரத்தில் ஏறினான்.

படகில் இருந்த துடுப்பை வெகு வேகமாக சுழற்றி படகை திக்கு தெரியாத திசையில் செலுத்தினான். படகு செல்ல செல்ல அவன் ஏறிய இடம் தன்னை தொலைத்துக்கொண்டிருந்ததது ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படகில் ஏறும் முன் என்ன கண்டானோ அதுவே தெரிந்தது. இது வரை அமைதியாய் இருந்த நீர்நிலை நிலைகொள்ளாமல் ஆட ஆரம்பித்தது. இவன் படகை தூர தூர தூக்கி வீசிற்று, காற்றின் வேகத்தில் படகு கவிழ இவன் தண்ணீரில் சலமின்றி அமைதி கொண்டான்.

திடீரென ஒரு குளிர்ந்த அனுபவத்தை பெற்றான்....ஒரு குரலின் பிண்ணனியுடன் “ஏன்டா எரும பத்து மணியாச்சு பாரு தண்ணீ தெளிச்சி எழுப்பறத கூட தெரியாம..”

:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி..
அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணலாம்..:-))

மதன்..
அட.. இது கூட நல்லாயிருக்கே..:-))

மேவி... said...

"“ஏன்டா எரும பத்து மணியாச்சு பாரு தண்ணீ தெளிச்சி எழுப்பறத கூட தெரியாம..”"

இது தினமும் காபா கிட்ட அவங்க அம்மா சொல்லுறது தானே ...ஆமா மதன் அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது

Unknown said...

அற்புதமா எழுதியிருக்கிங்க....
வாசனையை நுகர்வதை அப்படியே எழுத்துக்களில் கொண்டுவந்துட்டீங்க...

அற்புதமான எழுத்து..!

Unknown said...

The Perfume படத்தை போல...