எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு பரபரப்பாக வெளியாகி உள்ளது "ஆயிரத்தில் ஒருவன்".
--> பருத்தி வீரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வரும் கார்த்தியின் படம்
--> புதுப்பேட்டைக்குப் பின் காணாமல் போன செல்வராகவனின் படம்
--> 32 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்ட படம்
--> சரித்திரம் + சாகசம் என்று வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகும் தமிழ்ப்படம்

முதலில் செல்வராகவனுக்கு ஒரு ராயல் சல்யூட். இப்படி ஒரு கதையை யோசிப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். சாதித்துக் காட்டி இருக்கிறார். தமிழில் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லலாம்.
( படத்தோட கதை எனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறவங்க அடுத்த மூணு பத்திய தாண்டிப் படிங்க மக்கா..)
காலம் - கி.பி.1300 . பாண்டிய மன்னனின் படையெடுப்பால் நாட்டை விட்டு ஓடுகிறார்கள் சோழர்கள். போகும்போது பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் அபகரித்துச் செல்கிறார்கள். வியட்நாமுக்கு அருகே இருக்கும் ஒரு தீவுக்கு தப்பிச் செல்லும் அவர்களை துரத்திக் கொண்டு போன பாண்டிய தளபதி, போகும் வழியை ஒரு ஓலையில் பதிவு செய்கிறான். அதன் பிறகு அந்த சோழவம்சம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
இன்று, கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஓலைச்சுவடி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் (பிரதாப் போத்தன்) கிடைக்கிறது. காணாமல் போன சோழ வம்சத்தை தேடும் முயற்சியில் ஆராய்ச்சியாளரும் காணாமல் போகிறார். அவரைத் தேடி அரசாங்கம் ஒரு குழுவை அனுப்புகிறது. போலிஸ் ஆபிசர் ரீமா, பிரதாப்பின் மகள் ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் போர்ட்டராக கார்த்தி. கடல், பாம்புகள், காட்டுவாசிகள், புதைகுழி என்று பல ஆபத்துகளைக் கடந்து தொலைந்து போன சோழ மக்களின் நகரைக் கண்டுபிடிக்கிறார்கள். இங்கே இடைவேளை.
அழிந்து போனதாக நம்பிக் கொண்டிருந்த சோழ வம்சத்தின் மிச்சம் அங்கே குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்கிறார்கள். அவர்களின் அரசன் பார்த்திபன். என்றேனும் தாய் தேசத்தில் இருந்து சேதி வந்து தாங்கள் சோழதேசம் திரும்புவோம் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கூட்டம். தான் சோழ தேசத்தின் பிரதிநிதி என்றும் மூன்று நாட்களில் சொந்த ஊர் திரும்பலாம் என்றும் பார்த்திபனை நம்ப வைக்கிறார் ரீமா. ஆனால் உண்மையில் அவர் காலம் காலமாக சோழர்களை பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர். நேரம் பார்த்து பார்த்திபனின் காலை வாரி விடுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.

சட்டையில்லாத வெறும் உடம்போடு காருக்குள் இருந்து கார்த்தி அறிமுகமாகும் காட்சி அட்டகாசம். எம்ஜியார் பாட்டுக்கு ஆடுகிறார். அதன் பிறகு சொங்கி சோதாவாகிப் போகிறார். முதல் பாதியில் ஊருக்கு நேர்ந்து விட்டார்போல வருவோர் போவோர் எல்லாரும் அவரை அடிக்கிறார்கள். இரண்டாம் பாதியில் உப்புக்கு சப்பாணி போல வந்து போகிறார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சூர்யாவின் குரல் போலவே கேட்கிறது. உடல்மொழியிலும் முக்கால்வாசி பருத்திவீரன். ரூட்ட மாத்துங்க பாசு.. ஆண்ட்ரியா செல்வராகவனின் அக்மார்க் சோகநாயகி. அவர் கவர்ச்சி காட்டாமல் இருப்பது நமக்கு நல்லது. படத்தின் ஆயிரம்வாலா பட்டாசு.. ரீமாசென். சான்சே இல்லை. ஆட்டம்பாட்டம் என்ன.. கத்திசண்டை என்ன.. கோபம் கொப்பளிக்க கண்களாலேயே வெறுப்பைக் கக்குவது என்ன.. தூள் பரத்தி இருக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் எரிச்சலைக் கிளப்பினாலும் இரண்டே காட்சிகளில் நம் உள்ளத்தை அள்ளிக் கொள்கிறார் பார்த்திபன். ரீமாவின் துரோகத்தால் தன் மக்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து ஒரு குற்றவுணர்வுடன் கூடிய நடையோடு அழுது கொண்டே வருகிறார் பாருங்கள்.. சூப்பர். இறுதிக் காட்சியில் கண்முன்னே தன் மக்கள் நாசம் செய்யப்படுவதைக் கண்டு துடிப்பதும் நல்ல நடிப்பு. அங்கங்கே வரும் கோண செஷ்டையையும் நடனத்தையும் தவிர்த்து பார்த்திபன்.. அட்டகாசம். அழகம் பெருமாளும் மற்றவர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்து இருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மக்கள் வெள்ளம். முகம், உடம்பு என எல்லாப் பகுதியிலும் கரியைப் பூசிக்கொண்டு சிரமப்பட்டு நடித்து இருக்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறார் செல்வராகவன்.
பின்னணி இசையில் பிசிறு தட்டி இருக்கிறார் பிரகாஷ் குமார். படத்தில் பயன்படுத்தி இருக்கும் பாடல்கள் - கோவிந்தா கோவிந்தா, உன்மேல ஆசைதான், நிலமெங்கே.. எல்லாமே நச். மாலை நேரம் படத்தில் இல்லையென்பது எனக்கு மிகவும் வருத்தம். கலை இயக்குனர் யாரென்று தெரியவில்லை.. கலக்கி இருக்கிறார். நீண்ட கால்களின் நிழல் நடராஜரின் உருவமாக வருவதில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளின் ஊடே இருக்கும் கோட்டைக் கொத்தளங்கள், சோழ மக்கள் தங்கி இருக்கும் இருண்ட குகைகள் என புகுந்து புறப்பட்டு இருக்கிறார். நேரத்துக்குத் தக்கவாறு கலர் டோன்கள் மாற்றம், அகண்ட கேன்வாஸ் என ராம்ஜியின் காமிரா மாயாஜாலம் செய்கிறது. படத்தில் ஒரே ஒருவர்தான் வேலை பார்க்கவில்லை. அவர் - எடிட்டர் கோலா பாஸ்கர். படம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதற்கு இந்தப்படம் நல்ல எடுத்துக்காட்டு.

எல்லா செல்வராகவன் படங்கள் போலவே இந்தப் படத்திலும் செக்ஸ், மனித உணர்வுகளைச் சொல்லும் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. இத்தனை நல்ல விஷயங்கள், வித்தியாசமான கதை.. பிறகு என்ன சூது என்கிறீர்களா? அது - திரைக்கதை. முதல் பாதியோடு படம் முடிந்திருந்தால் ஒரு அட்டகாசமான அட்வென்ச்சர் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார் செல்வா. எந்த ஆங்கிலப்படத்தின் சாயலும் இந்தப் படத்தில் இருக்காது என்றெல்லாம் பேட்டி தந்திருக்கிறார் செல்வா. ஆனால் படத்தின் டைட்டில் போடுவதே மம்மியின் உல்டா. கிங் சாலமன் மைன்ஸ், மெக்கென்னாஸ் கோல்டு, சீன சண்டைப் படங்கள், கிளாடியேட்டர் என்று நாம் பார்த்து ரசித்த பல படங்களின் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.
இப்போ என்னதான் பண்ண.. படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு.. வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.