June 11, 2010

உக்கார்ந்து யோசிச்சது (11-06-10)..!!!

சமீபத்தில் கோவையில் இருந்து பதிவுலகத் தோழி ஒருவர் அலைபேசியில் அழைத்து இருந்தார். பாலகுமாரன் எழுதிய "கடவுள் ஜூவுக்குப் போயிருந்தார்" என்னும் சிறுகதை இருக்கும் தொகுப்பு தனக்கு தேவைப்படுவதாகவும், அதை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தரும்படியும் கேட்டுக் கொண்டார். நான் இதுவரை அந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டது இல்லை என்பதோடு, எனக்குத் தெரிந்து பாலகுமாரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்த ஞாபகமும் இல்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கும் அந்தப் புத்தகம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான் எனக்குத் தோன்றியது... உண்மையிலேயே அந்த சிறுகதையை எழுதியது பாலகுமாரன் தானா? இந்தக் கதையின் பெயரை வேறு மாதிரி எங்கோ கேள்விப்படிருக்கிறோமே?

சட்டென்று ஏதோ நினைப்பில் எஸ்ராவின் "தமிழின் மிகச் சிறந்த நூறு சிறுகதைகளை"" எடுத்து தேடத் துவங்கினேன். நான் நினைத்தது சரிதான். அந்தக் கதையை எழுதியவர் சம்பத். கதையின் பெயர் - "சாமியார் ஜூவுக்குப் போகிறார்". பரவாயில்லை.. எழுதியவரைக் கண்டுபிடித்து விட்டோம்... இனி புத்தகத்தை எளிதாக வாங்கி விடலாம் என்றெண்ணி மதுரையில் இருந்த முக்கியமான புத்தக கடைகள் அனைத்திலும் விசாரித்தேன். ஏமாற்றம்தான் மிச்சம். அவருடைய தொகுப்பு எங்குமே கிடைக்க வில்லை. பதிப்பகம் தெரியாமல் போனதுதான் நான் செய்த தவறு என்றெண்ணி இணையத்தில் தேடலாம் என்று வந்து அமர்ந்தபோதுதான் உண்மையே விளங்கியது. இதுவரை சம்பத்தின் கதைகளே எதுவுமே தொகுப்பாக வந்தது கிடையாதாம். என்ன கொடுமை இது?

உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான விஷயம்? சம்பத்தை பற்றிய வெகு சில கட்டுரைகளே இணையத்திலும் காணக் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றின் சுட்டிகளை இங்கே இணைத்து இருக்கிறேன்..

சம்பத்தின் இடைவெளி - எஸ்ரா
இடைவெளி சம்பத் - ஆர்.பி.ராஜநாயகம்
"இடைவெளி" சம்பத் - அழியாச் சுடர்கள்
இடைவெளி எஸ்.சம்பத் - அய்யனார்

பதிவுலக நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். தங்கள் யாரிடமாவது சம்பத்தின் "இடைவெளி"யோ மற்ற கதைகளோ இருந்தால் தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். படித்து விட்டு பத்திரமாக திருப்பித் தந்து விடுகிறேன்.

***************

காமிக்ஸ் புத்தகங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று பழைய புத்தக கடைகளில் அடிக்கடி தேடுவதுண்டு. அதேபோல சென்ற வாரம் எதேச்சையாக தேடிக் கொண்டிருந்தபோது அருமையான இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. அசோகமித்திரனின் "காந்தியும் புலிக்கலைஞனும்" மற்றும் இரா.முருகனின் "முதல் ஆட்டம்". இரண்டு புத்தகமும் சேர்த்து வெறும் பத்து ரூபாய்க்கு தந்தார்கள். தமிழில் இலக்கியவாதிகளுக்கு உண்டான மரியாதை? ஹ்ம்ம்ம்...

மனதை கனக்க செய்யும் "புலிக்கலைஞன்" ரொம்பவே பிடித்து இருந்தது. ஏழ்மை ஒரு உண்மையான கலைஞனை என்னவாக ஆக்குகிறது என்பதை எளிமையாக சொல்லி இருக்கிறார். அடுத்ததாக இரா.முருகன். அவருடைய "மூன்றாம் விரல்" என்ற நாவலை ஏற்கனவே படித்து இருக்கிறேன். அது என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால் "முதல் ஆட்டத்தை" பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதல் கதையான "விடை"யிலேயே எனக்கு செமத்தியான அடி. மனிதன் பட்டாசு கிளப்பி இருக்கிறார். இரண்டு தொகுப்பையும் இன்னும் முழுதாக படிக்கவில்லை. கூடிய சீக்கிரம் படிக்க வேண்டும்.

***************

பத்து நாட்களுக்கு முன்பு.. என்னுடைய பிறந்த நாள் அன்று.. அதிகாலையில் இருந்தே நண்பர்களும் மாணவர்களும் ஒவ்வொருவராக கூப்பிட்டு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய குறுந்தகவல்களும் வந்து கொண்டிருந்தன. அவற்றில் திடீரென ஒரு குறுந்தகவல் விஜயைத் திட்டி வந்திருந்தது. யார் அனுப்பியது என்று பார்த்தால் அசோக் என்ற என்னுடைய மாணவன். கொங்கு கல்லூரியில் என்னிடம் படித்தவன். தொடர்ச்சியாக அவனிடம் இருந்து ஐந்தாறு குறுந்தகவல்கள். எல்லாமே விஜயைத் திட்டி, கிண்டல் செய்பவை. இத்தனைக்கும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்பதை விட வெறியன் என்று சொல்லலாம். என்ன ஆச்சு இவனுக்கு.. ஏன் இப்படி என்று எனக்கு ஒரே குழப்பம்.சற்று நேரத்தில் அவனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

"பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.."

"நன்றிடா.. என்னடா ஆச்சு உனக்கு..? விஜயைத் திட்டி மெசேஜ் எல்லாம் அனுப்புற? கட்சி மாறிட்டியா..?"

"அப்படி எல்லாம் இல்லை சார்.. அந்த மெசேஜ் எல்லாம் பாக்குறப்போ நீங்க கொஞ்ச நேரமாவது சந்தோஷப்பட்டு இருப்பீங்க இல்ல? எனக்கு அது போதும் சார்.. எங்க சார் சந்தோஷத்துக்கு முன்னாடி நாம விஜய் ரசிகர்ங்கிறதெல்லாம் ரெண்டாம்பட்சம்தான் சார்.."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தது. ஆசிரிய பணிக்கு வந்து என்ன சம்பாதித்து இருக்கிறேனோ இல்லையோ, எனக்காக ஒரு சில நல்ல மனிதர்களை, உறவுகளை சம்பாதித்து இருக்கிறேன் என்று ரொம்பவே பெருமையாக சொல்லிக் கொள்வேன்.

***************

ரொம்ப லேட்டாக.. "சிங்கம்" படத்தைப் பற்றி.. பர பரவென்று தீ வைத்தது போல போகிறது. ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒன்றரை டன் வெயிட்டுடா என்று ஒளட்டினாலும் சூர்யாவை ரசிக்க முடிகிறது என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தல மற்றும் தளபதி வகையறாக்கள் முழித்துக் கொள்ளா விட்டால் சிவசம்போதான். அனுஷ்கா செம ஜில். ஆங்காங்கே பெயின்ட் அடித்த கலாரசனை இல்லாத சென்சார் அதிகாரிகள் ஒழிக. படத்தின் ஒரே கடுப்பு விவேக்கின் ரெட்டை அர்த்த வசனங்கள். பாடல்களை முதன்முதலில் கேட்டபோது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது படத்தோடு பார்க்குபோழுது எல்லாப் பாடல்களுமே நன்றாக இருப்பதைப் போன்றதொரு உணர்வு. குறிப்பாக "காதல் வந்தாலே", "என் இதயம்" ரெண்டுமே ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் கம்பீரமான சிங்கம்.

எல்லா இடங்களிலுமே படம் ரொம்ப நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கொடுமையை கவனியுங்கள். படம் வெளியான மறுநாளே இணையத்தில் "அப்லோடு" செய்து விட்டார்கள். அப்புறம் எங்கிட்டு வெளங்கும்?

***************

90 -களின் ரகுமானை நினைவிருக்கிறதா? பாடல் வெளியீடு என்றால் போதும்.. கேட்காமலே நம்பி வாங்கலாம். அதேபோல இன்றைக்கு ஹிந்தியில் நான் நம்பிக் கேட்கிற மனிதர் ஹிமேஷ் ரேஷமையா மட்டும் தான். அட அதாங்க.... நம்ம தசாவதாரத்துக்கு இசை அமைத்தவர். மனிதர் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பது என்று முடிவு செய்து விட்டதால் நஷ்டம் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு தான்.வெகு நாட்களுக்குப் பிறகு அவர் இசையமைத்து, நாயகனாக நடிக்கும் "கஜராரே" (kajraare) என்ற படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. கேட்டுப் பாருங்கள். கலக்கி இருக்கிறார். பாடல்களைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்..

***************

தமிழ் வலைப்பதிவுகளில் கல்வி, கல்வி நிறுவனங்கள் சார்ந்து எழுதுபவர்கள் (எனக்குத் தெரிந்து) ரொம்பவே கம்மி என்று நினைக்கிறேன். அந்த வகையில் மதுரையில் இருந்து எழுதி வரும் நண்பர் சரவணன் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டியவர். "அரசிடம் கல்வியை இலவசமாகக் கேட்காதது ஏன்?" என்கிற அவருடைய இடுகையை வாசித்துப் பாருங்கள். சமூக அக்கறையுடன் எளிமையான மொழியில் முக்கியமான விஷயங்களை சொல்லிச் செல்கிறார். இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பா...

***************

வாசித்ததில் பிடித்தது...

நாம் பிறந்த பின்பு பேச கற்றுக் கொள்ள இரண்டு வருடங்கள் ஆகிறது.. ஆனால் எதைப் பேசக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள நம்முடைய வாழ்நாள் முழுதும் கூட போதுமானதாக இருப்பதில்லை..

***************

நிறையவே சீரியசாப் பேசியாச்சு.. அதனால் முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜோக்ஸ்.. இணையத்துல இருந்து சுட்டதுதான்ப்பா..

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

கண்ணம்மா : ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?

ராஜா : அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப்படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!

ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. அப்போது "அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்..

அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்.."ஓ லூசு பிடிச்ச காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

அத்தனையும் அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்... இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

36 comments:

அத்திரி said...

ஏன் புரொபசர் இப்படி???

இப்பவெல்லாம் ரொம்பவே எலக்கியவியாதி ஆகிட்டு வர்றீங்க.......... ஜாக்குரதை..........................

சென்ஷி said...

அன்பின் கா.பா.,

இடைவெளி நாவல் பிடிஎஃப் வடிவில் இருக்கிறது. தங்கள் மடல் முகவரியிலிருந்து எனக்கு ஒரு நினைவூட்டல் தருமாயின் உடனே அனுப்பி வைக்க இயலும். எனது மின்மடல் முகவரி - senshe.indian@gmail.com

சாமியார் ஜூவிற்குப் போகிறார் - கதையை பாலகுமாரன் தனது இரும்புக்குதிரைகள் நாவலில் சம்பத்திற்கான நினைவாக இணைத்து வைத்ததாக எனக்கு சக பதிவர் ஒருவரிடமிருந்து தகவல் வந்தது. அதன் காரணமாகவே நானும், “தோழி”யிடம் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்” நாவலில் இருக்கலாமென்று குறிப்பிட்டுக் கூறியிருந்தேன்.. :)

அவர் வாங்கிய இரும்புக்குதிரைகள் புத்தகத்தில் அக்கதை இல்லை. வேறு ஏதும் பாலகுமாரனின் நாவல்களில் இடைச்செருகலாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தேடியபொழுது உங்கள் பெயரை இன்னொரு நண்பர் குறிப்பிட உங்களிடம் கேட்டதாகக் கூறியிருந்தார். நானும் உங்களிடமிருந்து வரும் பதிலுக்காய் காத்திருந்து பதிவைப் படித்துத் தெரிந்து கொண்டேன் :)))

உங்களுக்கு கதை கிடைத்தால் எனக்கும் அனுப்பி வைக்கவும். நன்றி..

சென்ஷி said...

அழியாச்சுடர்கள் தளத்தில் தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் அவர்களின் சில கதைகளும் கிடைக்கின்றன. தமிழின் நூறு சிறந்த கதைகள் பண்புடன் இணைய குழுமத்தில் தொகுத்து வருகின்றோம்.

வரதராஜலு .பூ said...

நல்லதொரு பகிர்வு.

சென்ஷி said...

//இரண்டு புத்தகமும் சேர்த்து வெறும் பத்து ரூபாய்க்கு தந்தார்கள். தமிழில் இலக்கியவாதிகளுக்கு உண்டான மரியாதை? //

:((

இரா. முருகனின் “விடை” கதை அருமையா ஒன்று. அதைவிட எனக்கு “முதல் ஆட்டம்’ சிறுகதை மிகவும் பிடித்திருந்தது.

மூன்றாம் விரல் - நாவல், கணிணித்துறையில் பணி புரிபவர் பற்றிய தமிழில் முதல் நாவல் என்று நினைக்கிறேன் (சுஜாதா நிறைய எழுதிட்டார். ஆனால் சூழல் கொண்டு எழுதியதில் இதுதான் முதல் என்று தோன்றுகிறது).

புலிக்கலைஞன் - உங்கள் கருத்து உண்மைதான்.

(வெறும் பத்து ரூபாய்ல நல்ல சிறுகதைகள் கிடைக்குதுன்னா நானும் ஒரு லிஸ்ட் அனுப்பி வைப்பேனே!)

மாதேவி said...

தகவல்கள், ஜோக்ஸ் அனைத்தும் நன்று.

Raju said...

இந்த ஜோக்ஸெல்லாம் பார்க்கும் போது, வூட்ல தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்களோ..?

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாணவனுக்கு பாராட்டுக்கள்,

முதல் ஜோக்கும், கடைசி ஜோக்கும் சொந்த அனுபவமா?

இணையத்தில் படங்களை அப்லோட் செய்வது வருத்தமான விசயம்தான்.

அமுதா கிருஷ்ணா said...

அடிக்கடி உட்கார்ந்து யோசிங்க சார்..நல்லாயிருக்கு...

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
ஏன் புரொபசர் இப்படி??? இப்பவெல்லாம் ரொம்பவே எலக்கியவியாதி ஆகிட்டு வர்றீங்க.......... ஜாக்குரதை..//

எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான் அண்ணே..:-)))

@சென்ஷி..

தலைவரே.. தனியா ஒரு மின்மடல் அனுப்புறேன்..:-))

// வரதராஜலு .பூ said...
நல்லதொரு பகிர்வு.//

நன்றி சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாதேவி said...
தகவல்கள், ஜோக்ஸ் அனைத்தும் நன்று.//

வாங்க மாதேவி.. நன்றி..

// ♠ ராஜு ♠ said...
இந்த ஜோக்ஸெல்லாம் பார்க்கும் போது, வூட்ல தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்களோ..?//

தம்பி.. கம்பெனி சீக்ரட்ட இப்படி பப்ளிக்ல போட்டு உடைக்கக் கூடாதுப்பா..

வால்பையன் said...

அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது, எனக்கு கூட ஒரு முறை அனுப்பியிருந்தார், தேடி எடுத்து அனுப்புகிறேன்!

மரணத்திற்கும், வாழ்விற்கும் இடையிலான வாழ்க்கை குறிப்பு அது!

கார்த்திகைப் பாண்டியன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாணவனுக்கு பாராட்டுக்கள்,//

நன்றிங்க..

//முதல் ஜோக்கும், கடைசி ஜோக்கும் சொந்த அனுபவமா?//

தலைவரே.. நான் இன்னும் ஒத்தப் பனைமரம்தான்..

//இணையத்தில் படங்களை அப்லோட் செய்வது வருத்தமான விசயம்தான்.//

:-(((((

// அமுதா கிருஷ்ணா said...
அடிக்கடி உட்கார்ந்து யோசிங்க சார்..நல்லாயிருக்கு...//

கண்டிப்பா.. நன்றிங்க..

Thomas Ruban said...

நல்ல தகவல்கள்,ஜோக்ஸ் அனைத்தும் அருமை.
நன்றி சார்.

க.பாலாசி said...

//படம் வெளியான மறுநாளே இணையத்தில் "அப்லோடு" செய்து விட்டார்கள்.//

அப்டின்னா நான்தான் லேட்டா...சரிதான்..

மதுரை சரவணன் நல்ல பகிர்வு..

நீங்க கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஏதாச்சும் அசரீரி ஒலிக்கிதான்னு கவனமா பாருங்க...

குடந்தை அன்புமணி said...

நல்லாவே யோசிக்கிறீங்க கா.பா. தாமதமாக இருந்தாலும் தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.
(திரு)மணநாள் எப்போ?

ஜெய்சக்திராமன் said...

இதே போல் எஸ்ரா வின் "உபபாண்டவம்" நாவலின் பிரதியும் கிடைபதற்கரிதாய் மாறிவிட்டது.. உங்கள் உதவி தேவை வாத்தியாரே!!!

நேசமித்ரன் said...

வாசிப்பவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசுவது குறைந்து வரும் நிலையில் இந்த இடுகை ஆறுதல்

நன்றி கா.பா

யாத்ரா said...

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D

nanba sampaths one short story here.

பனித்துளி சங்கர் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////////உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான விஷயம்? சம்பத்தை பற்றிய வெகு சில கட்டுரைகளே இணையத்திலும் காணக் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றின் சுட்டிகளை இங்கே இணைத்து இருக்கிறேன்..

சம்பத்தின் இடைவெளி - எஸ்ரா
இடைவெளி சம்பத் - ஆர்.பி.ராஜநாயகம்
"இடைவெளி" சம்பத் - அழியாச் சுடர்கள்
இடைவெளி எஸ்.சம்பத் - அய்யனார்
///////


அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டேன் நேரம் அமையும்பொழுது வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது, எனக்கு கூட ஒரு முறை அனுப்பியிருந்தார், தேடி எடுத்து அனுப்புகிறேன்!//

நன்றி தல..

// Thomas Ruban said...
நல்ல தகவல்கள்,ஜோக்ஸ் அனைத்தும் அருமை. நன்றி சார்.//

:-)))))

//க.பாலாசி said...
மதுரை சரவணன் நல்ல பகிர்வு..
நீங்க கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஏதாச்சும் அசரீரி ஒலிக்கிதான்னு கவனமா பாருங்க...//

இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உங்களுக்கு நண்பா..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
நல்லாவே யோசிக்கிறீங்க கா.பா. தாமதமாக இருந்தாலும் தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.திரு)மணநாள் எப்போ?//

கூடிய சீக்கிரம் சொல்றேன் தல.. அப்பப்போ ஏதாவது எழுதுங்கப்பா..

//ஜெய்சக்திராமன் said...
இதே போல் எஸ்ரா வின் "உபபாண்டவம்" நாவலின் பிரதியும் கிடைபதற்கரிதாய் மாறிவிட்டது.. உங்கள் உதவி தேவை வாத்தியாரே!//

இல்லையே.. விஜயா பதிப்பக வெளியீடுடா.. என்கிட்ட இருக்கு.. வேணும்னா சொல்லு..கல்லூரிக்கு கொண்டு வர்றேன்..

// நேசமித்ரன் said...
வாசிப்பவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசுவது குறைந்து வரும் நிலையில் இந்த இடுகை ஆறுதல்நன்றி கா.பா//

வாங்க தல.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாத்ரா said...
nanba sampaths one short story here//

ஆகா.. ரொம்ப நன்றி யாத்ரா

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டேன் நேரம் அமையும் பொழுது வாசித்து விடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி//

கண்டிப்பா வாசிங நண்பா

நசரேயன் said...

//உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான
விஷயம்?//

எனக்கும் இதே கவலைதான் வாத்தியாரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//sinhacity said...
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்//

நம்மளையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிங்க..

//நசரேயன் said...
எனக்கும் இதே கவலைதான் வாத்தியாரே//

:-((((((

ஜெய்சக்திராமன் said...

//விஜயா பதிப்பக வெளியீடுடா.. என்கிட்ட இருக்கு.. வேணும்னா சொல்லு..கல்லூரிக்கு கொண்டு வர்றேன்..//


Thank you sir... I'll meet you in the college...

"உழவன்" "Uzhavan" said...

ஜோக்ஸ் சூப்பர் நண்பா :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெய்சக்திராமன் said...
Thank you sir... I'll meet you in the college...//

Ya sure da.. we shall see

//"உழவன்" "Uzhavan" said...
ஜோக்ஸ் சூப்பர் நண்பா :-))//

thanks nanvneeth..:-))))

RAMYA said...

உக்காந்து யோசிக்க நல்ல இடமா கிடைச்சிருக்கு போல, அதான் எல்லாம் அருமையா எழுதி இருக்கீங்க.

ம்ம்ம்... வர வர எழுத்து எங்கோ போயிகிட்டு இருக்கு..

அதான்பா செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள போவது போல இருக்கு:))

அப்புறம் அந்த ஜோக்ஸ் எல்லாம் அருமை:)

Karthik said...

வாட்டே கோயின்சிடென்ஸ். நானும் இன்னிக்கு மூர் மார்கெட் போய் பழைய புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்.

உங்க பிறந்தநாள்னு மேவி சொன்னார். உங்க நம்பருக்கு மெஸேஜ் அனுப்பினா போகல. புது நம்பர் அனுப்பிச்சு வைங்க.

எனக்கு ஹிமேஷ் பிடிக்காது.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ரம்யா அக்கா..

நன்றிக்கா.. நான் சாதாரணமாத்தான் எழுதுறேன்..நமக்கு இந்த நட்புகள் போதும்க்கா..

//Karthik said...
வாட்டே கோயின்சிடென்ஸ். நானும் இன்னிக்கு மூர் மார்கெட் போய் பழைய புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். //

எதுனா நல்லது தேறுச்சாப்பா..? கெடச்சா சொல்லுங்க..

//எனக்கு ஹிமேஷ் பிடிக்காது.//

ஏன்..:-(((

மங்குனி அமைச்சர் said...

அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.///


இது அப்படியே ரிவர்சுல எனக்கு நடந்தது சார், நான் போன் திட்டிகிட்டு (வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டுதான் ) பக்கத்துல நடந்து போனவன் நின்னு என்னைய திட்ட வந்தான் , போன பாத்துட்டு மொரசிட்டுபோய்தான்

shortfilmindia.com said...

இந்த வாட்டி புத்தகமும் கையுமா உக்காந்து யோசிச்சிருப்பீங்க போல..

கேபிள் சங்கர்

Anonymous said...

I would like to exchange links with your site ponniyinselvan-mkp.blogspot.com
Is this possible?

Anonymous said...

I would like to exchange links with your site ponniyinselvan-mkp.blogspot.com
Is this possible?

R. Gopi said...

நாங்களும் ஒரு பதிவு போட்டிருக்கிரோம்ல

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_29.html