March 10, 2010

உக்கார்ந்து யோசிச்சது ( 10 - 3 - 10 )..!!!

அப்பாவின் பணிஓய்வு நிகழ்ச்சிக்காக போன சனிக்கிழமை ( 27 - 02 - 10 ) கல்லூரியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். நாற்பத்து இரண்டு வருடங்கள். கடைநிலை ஊழியராக இருந்து இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அது அவருடைய உழைப்புதான் என்று நண்பர்கள் பேசியபோது அப்பா ரொம்பவே நெகிழ்ந்து போனார். அவர் ஏற்புரை ஆற்றியபோது வந்தவர்கள் அனைவரும் கண்கலங்கி விட்டனர். அத்தனை பேருக்கும் அவர் நல்லவராக இருந்திருக்கிறார் என்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. நிகழ்ச்சி முடிந்து கல்லூரிக்கு கிளம்பினேன். ஒன்றரை மணிக்குள் கல்லூரியில் கையெழுத்து போட வேண்டும். 12:45 மணிக்கு எல்லாம் ரிங் ரோட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் துணை முதல்வர் வருகிறார் என்று சொல்லி வண்டியை நிறுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் டிராபிக் கிளியர் ஆகவில்லை. யாரும் வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. மணி 1:20 . எளிமை, நேர்மை என்றெல்லாம் பேசி வருகிறார் துணை முதல்வர். மொட்டை வெயிலில் மக்களை போட்டு பாடாய்ப் படுத்துவதுதான் உங்கள் எளிமையா? என்னமோ போங்கப்பா..

வண்டியை நிறுத்தி விட்டு அங்கே நின்றிருந்த காவலர் ஒருவரிடம் பேசினேன். நிலைமையை பொறுமையாக கேட்டவர் என்னை தன்னுடைய மேலதிகாரியிடம் கூட்டி சென்றார். காவலர் அவரிடம் பேச வாயைத் திறந்ததுதான் தாமதம். வள்ளென்று விழுந்தார். "உனக்கு வேற பொழப்பே கிடையாதா? எல்லார் சொல்றதையும் கேட்டுக்கிட்டு..போய்யா.." என்னிடம் திரும்பினார்."யாரையும் விட முடியாதுங்க.. உங்க சம்பளம் போனா எனக்கென்ன.. போன் பண்ணி லீவு சொல்லுங்க.." வேலையை பார்க்கப் போய் விட்டார். நான் என்னை கூட்டிச் சென்ற காவலரிடம் அவருக்கு திட்டு வாங்கித் தந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். "பரவாயில்லை சார்" என்றபடி விலகிப் போனார். நான் திரும்பி நனடந்தேன். அருகில் காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது.

உங்கள் சேவையில்.. காவல்துறை உங்கள் நண்பன்..

போங்கடா போக்கத்தவங்களா..

***************

எப்.எம்மில் சகட்டுமேனிக்கு மொக்கை போடுவார்கள் என்று தெரியும். ஆனால் சுத்தமாக லூசு மாதிரி பேசுவார்கள் என்பதை போனவாரம்தான் தெரிந்து கொண்டேன். உலகக் கோப்பை ஹாக்கி துவங்கும் நாள். ஒரு பெண் தொகுப்பாளினி பேசிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு நம்ம தேசிய விளையாட்டான ஹாக்கி பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க போறோம். கிரிக்கெட் மாதிரியே தான் ஹாக்கியும். பேட் வச்சு தான் விளையாடுவாங்க.. ஆனா பாருங்க.. இந்த பேட் கொஞ்சம் ஒல்லியா இருக்கும்.. அத்தோட பேட்டோட கடைசி கொஞ்சம் வளைஞ்சு இருக்கும். அதுனாலதான் மக்களுக்கு இந்த விளையாட்டு பிடிக்கலையோ என்னமோ.. கிரிக்கெட் பேட் மாதிரி இதையும் குண்டா நேரா வச்சுட்டா நிறைய பேர் பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன்.."

அட நாசமாப் போறவங்களா.. நீங்க ஹாக்கிக்கு விளம்பரம் பண்ணலைன்னாலும் பரவா இல்ல.. ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமா கிடக்கற விளையாட்ட இப்படி எல்லாம் பேசி சாகடிக்காம இருந்தாலே போதும்டா..

***************

கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு நித்யா விஷயம் பற்றி போனபோது எதனால் இந்த சாமியார்கள் இப்படி செய்கிறார்கள் என்றொரு கேள்வி எழுந்தது. அப்போது என்னோடு வேலை பார்க்கும் ஒரு இஸ்லாமிய அன்பர் குறுக்கிட்டு சொன்னார். "இந்து சமுதாயத்தில் மட்டும்தான் இப்படி விஷயங்கள் நடைபெறுகிறது என்பது கிடையாது. எங்கள் பள்ளிவாசல்களில் ஹஜ்ரத்துகள் என்று சிலர் இருப்பார்கள். எல்லார் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும் அவர்களுக்கு அழைப்பு உண்டு. கறி, கோழி என்று அருமையான சாப்பாடு. எந்த வேலையும் கிடையாது. வருவோர் போவோரை ஆசிர்வாதம் பண்ணுவது மட்டும்தான்."

"வெறுமனே சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வளர்த்துக் கொண்டிருந்தால் சும்மா இருக்கத் தோன்றுமா? வணக்கம் சொல்ல வரும் சின்னப் பெண்களிடம் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினை பல இடங்களில் இருக்கிறது. இதனாலேயே இப்போதெல்லாம் ஹஜ்ரத்துகளை அழைத்தால் வீட்டில் மாமிசம் சமைக்காமல் சாதாரண சாப்பாடே செய்கிறோம். அத்தோடு பெண் பிள்ளைகளை அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கத் தனியாக அனுப்புவதில்லை.." சொல்லி முடித்தார். என்னத்த சொல்ல? வீட்டுக்கு வீடு வாசப்படி..

***************

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பற்றி நான் எழுதிய விமர்சனத்துக்கு எக்கச்சக்க எதிர்வினைகள். நண்பர் அ.மு.செய்யது போனில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார். மேல்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மனநிலை இதுபோல புரிந்து கொள்ள முடியாத, நிலை இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும் என்றார். அதேபோல நண்பர் சுதர்சனனும் கவுதமை நான் ரொம்பவே குறைத்து மதிப்பிடுவதாக குற்றம் சொன்னார். ரொம்ப நாளாக காணாமல் போயிருந்த நண்பர் ஆதவாவும் ஒரு நீண்ட பின்னூட்டத்தில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தார்.

ஆரோக்கியமான முறையில் நண்பர்கள் தங்களுடைய எதிர் கருத்துகளை பதிவு செய்தது ரொம்பவே பிடிக்கிறது. எக்காரணம் கொண்டும் நான் என்னுடைய் கருத்துகளில் இருந்து மாறப்போவது கிடையாது என்றாலும் ஒரு விஷயம் பற்றிய பலருடைய மாற்றுக் கண்ணோட்டத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. இது தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

***************

"மறைபொருள்" என்றொரு குறும்படத்தை இணையத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஒரு கனமான விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் சோகம் நெஞ்சை உருக்குகிறது. கண்டிப்பாக பாருங்கள். மற்றொரு குறும்படம் தோழர் மாதவராஜின் பக்கத்தில் காணக்கிடைக்கிறது. "பள்ளம்" - அருமையான குறும்படம் தோழர். வாழ்த்துகள்.

***************

சமீபத்தில் ரொம்பவே ரசித்த எஸ்.எம்.எஸ்..

பொறியியல் படிக்கும் மாணவர்களின் வருங்காலம்?

எலக்டிரிக்கல் ( ECE & EEE )

ரேடியோ ரிப்பேர்.. சவுண்ட் செர்விஸ்.. விசேஷ வீட்டுகளுக்கான சீரியல் லைட் செட்டிங்க்ஸ்..

மெக்கானிக்கல் ( Mechanical )

சைக்கிள் பஞ்சர்.. ட்ராக்டர் ரிப்பேர்

சிவில் ( Civil )

சித்தாள்.. கொத்தாள்.. மேஸ்திரி

ஏரோ.. ( Aero )

பொம்ம துப்பாக்கி.. ரிமோட் பிளேன்.. பேப்பர் காத்தாடி

கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி ( CSE & IT )

சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம்

மக்களே.. இது விளையாட்டுக்காக மட்டுமே.. எந்த வேலையையுமே நான் குறைத்து மதிப்பிட வில்லை என்பதை நினைவில் கொள்க..

நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))

36 comments:

சுதந்திரன் said...

உட்கார்ந்து யோசிச்சதுக்கே இவ்வளவு கிடைக்குதுன்னா யோசிச்சுக்கிட்டே உட்காரந்தா... எங்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கும்போல... அருமை வாழ்த்துகள்!

மேவி... said...

boss.... பாஸ் ...உங்க பதிவில் பெயர் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ????

பதிவு நல்ல இருக்கு

மேவி... said...

சென்னைக்கு வந்து ரேடியோ கேட்டு பாருங்க ...செம மொக்கை போடுவாங்க (என்ன இருந்தாலும் என் அளவுக்கு வராது )

Raju said...

அந்த எஸ்.எம்.எஸ் கட்டாயம் உண்மையாயிரும் போல இருக்கு தல..!

முக்குக்கு மூனு இஞ்சினியரிங் காலேஜ் வச்சா இப்பிடித்தான்..!
2025ல ஏதாவது வார இதழ் கூட ஒரு இஞ்சினியரிங் சர்ட்டிபிக்கேட் இலவசமாக கொடுக்கும் நிலை கூட வரலாம்.
:-)


மறைபொருள் அருமை. இயக்கம் பொன்.சுதான்னு நினைக்கிறேன்.

Anbu said...

\\\boss.... பாஸ் ...உங்க பதிவில் பெயர் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ????\\

அவரை பற்றி ஒரு நாலு வார்த்தை திட்டிட்டு போங்கண்ணே...

மேவி... said...

ஒரு முறை கோபாலபுரம் பக்கம் போயிட்டு வாங்க

===
சிம்பு த்ரிஷாவுக்கு முத்தம் தந்ததை பார்த்து உங்களுக்கு பொறமை ....வேறு ஒன்றுமில்லை.

Anbu said...

பதிவு நல்லா இருக்குண்ணே...

Anbu said...

\\\சிம்பு த்ரிஷாவுக்கு முத்தம் தந்ததை பார்த்து உங்களுக்கு பொறமை ....வேறு ஒன்றுமில்லை.\\\

இந்த கருத்தை நான் மீண்டும் மீண்டும் ரீப்பிடுகிறேன்..

மணிஜி said...

சீக்கிரம் கிடா வெட்டி கல்யாண சாப்பாடு போடப்பா..(கிடா யாருண்ணு நான் சொல்லனுமா?)

மேவி... said...

"Anbu said...
\\\boss.... பாஸ் ...உங்க பதிவில் பெயர் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ????\\

அவரை பற்றி ஒரு நாலு வார்த்தை திட்டிட்டு போங்கண்ணே..."


appadiya ...karthi neenga oru ilakkiyavathi

vasu balaji said...

ம்ம். அப்பா ரிடயர் ஆயிட்டாங்களா? பெருமிதத்தோட நெஞ்ச நிமிர்த்திக்கலாம் கார்த்திக். அப்பாக்கு கிடைத்த பாராட்டு முற்றிலும் ஏற்புடையது. கடை நிலை ஊழியராகச் சேர்ந்து உயர்வடைவது சாதாரணமான விஷயமில்லை. நூறில் 99 பேர் தடம்மாறிப் போய்விடுவார்கள். நானும் சாம் ப்ளட் என்பதால் நன்றாகவே தெரியும். என் வணக்கத்தைச் சொல்லுங்கள்.

இந்த இடுகைக்கு ட்ராஃபிக் ஜாமில் யோசித்ததுன்னு போட்டிருக்கலாமோ?

கிடா யாருன்னு நீங்களே சொல்லிடுறீங்களா? தண்டோராவ கேக்கறதா?

Balakumar Vijayaraman said...

பிரஸண்ட் சார்.

☼ வெயிலான் said...

என் அலுவலக நண்பர் அவருடைய அப்பா இதே போன்று பணி ஓய்வு நிகழ்வுக்கு அழைத்தாரென்றும், போகப் பிடிக்கவில்லையென்றும் சொன்னார்.

நிச்சயம் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

வந்து, நல்லவேளை நான் தவற விட்டிருப்பேன். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சி மற்றும் என் அப்பாவைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன் என்று நெகிழ்ந்து சொன்னார்.

☼ வெயிலான் said...

விதாவ குறித்து.....

நேற்று இரவு உணவகத்தில் முரளியின் குறுஞ்செய்தி, உங்களின் விமர்சனம், முரளியை வஞ்ச வசவு ஆகியவற்றைப் பற்றி நானும், முரளியும் பேசிக் கொண்டிருந்தோம்.

நாம் மூன்றாம் மனிதனாய், அந்த மனநிலையில் படம் பார்க்கும் போது உங்களின் விமர்சனம் சரியே. ஒரு சிலர் அவர்களை கார்த்திக்காக உருவகம் செய்யும் போது, படத்தோடு ஒன்றி விடுகிறார்கள்.

நம் பொருளாதார சூழல், வளர்ந்த சூழல், பழகிய மனிதர்கள் இவைகள் வேறு.

இது மாநகர மேல் தட்டு மக்களுக்காக, மக்களின் மனோபாவத்தில் எடுக்கப்பட்ட படம்.

என்னைப் போல உங்களைத் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் உங்களின் விமர்சனம் சரியே என்று தான் சொல்வார்கள் :)

Joe said...

//
உங்கள் சேவையில்.. காவல்துறை உங்கள் நண்பன்..

போங்கடா போக்கத்தவங்களா..
//

எய்தவனிருக்க அம்பை நோவானேன் நண்பா?

மேவி... said...

உழைப்பிற்கும் நேரமைக்கும் என்றுமே பலன் உண்டு ..... (இதைச் சொல்லி சொல்லி தான் எங்க அம்மா எங்களை வளர்த்தாங்க. அதை இப்போ உங்களுக்கு சொல்கிறேன். சீக்கிரம் வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளை அடைய என் வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க.

மார்கழிச் சோழன் said...

அனைத்து எஸ்.எம்.எஸ் களும் அருமை!

ஜெட்லி... said...

துணை முதல்வர் எளிமை....என்னத்த சொல்றது....!!

நானும் எப்.எம் கேட்டு நொந்தவனில் ஒருவன்.....

அகல்விளக்கு said...

எஸ்.எம்.எஸ்...
சூப்பர்.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டீர்கள், கார்த்திக்..

பகிர்வுக்கு நன்றி.

வால்பையன் said...

//காவல்துறை உங்கள் நண்பன்.. //


உங்கள் என்றால் அரசியல்வாதிகள் என்று அர்த்தம்!

க.பாலாசி said...

உக்கார்ந்து நொந்திருக்கீங்க....

Unknown said...

//.. உங்கள் சேவையில்.. காவல்துறை உங்கள் நண்பன்.. //

:-))

மறைபொருள்.. :-(
(இதற்கு முன்பே வேறொரு பதிவில் பார்த்த ஞாபகம்)

Anonymous said...

எக்காரணம் கொண்டும் நான் என்னுடைய் கருத்துகளில் இருந்து மாறப்போவது கிடையாது
//

உங்க நேர்ம ரொம்ப பிடிச்சியிருக்கு நண்பா....

மன்னார்குடி said...

தமிழ்நாட்டுல மட்டும் 440 பொறியியல் கல்லூரி இருக்குன்னு ஹிந்து பேப்பர்-ல போட்ருந்தாங்க. போற போக்க பாத்தா நீங்க விளையாட்டா சொன்னது நடந்துடும் போல இருக்கு.

தமிழ் மதுரம் said...

ஏன் சார்... றூம் போட்டு உட்க்கார்ந்து தான் யோசிப்பீங்களோ??? சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் பதிவு........

வெள்ளிநிலா said...

உக்கார்ந்து நொந்திருக்கீங்க!!

:)

"உழவன்" "Uzhavan" said...

"நான் யாருனு தெரியும்ல.. நான் தான் பொ.செ. கா. பாண்டியன்னு சொல்லவேண்டியதான நண்பா.. ஒருவேளை அந்த போலீஸ்காரர் உங்க ப்ளாக்க படிக்குரவரா இருந்தாலும் இருப்பாருல :-)

ச.முத்துவேல் said...

/அவர் ஏற்புரை ஆற்றியபோது வந்தவர்கள் அனைவரும் கண்கலங்கி விட்டனர்/
இதுவே பெரிய விசயம்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு. எஸ்.எம்.எஸ் மேட்டர் ரியலி சூப்பர்.

வினோத் கெளதம் said...

பதிவு வழக்கம்போல் கலக்கல்..அப்பாவிற்கு இனிமேல் ரொம்ப போரடிக்க ஆரம்பித்துவிடும்..!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பகிர்தல் கோபம் நெகிழ்ச்சி சிரிப்புன்னு நல்லாவே இருந்தது...

நிகழ்காலத்தில்... said...

எல்லா நிகழ்வுகளுமே உங்கல் பாணியில் ’நச்’னு இருக்கு தல..

Balakumaran Lenin said...

எஸ்.எம்.எஸ்.ல கூட நமக்கு ஜோசியம் ன்னு தான் வருது!!!

அந்த தொகுப்பை கேட்டவர்களுக்கு ஹாக்கி பார்க்கும் ஆசையே போய்விடும்!!!

கல்லூரியில் நடை பெற்ற மட்டை பந்து போட்டியை பற்றி எதிர்பர்தேனே!!

shabi said...

இஸ்லாமிய அன்பர் குறுக்கிட்டு சொன்னார். "இந்து சமுதாயத்தில் மட்டும்தான் இப்படி விஷயங்கள் நடைபெறுகிறது என்பது கிடையாது. எங்கள் பள்ளிவாசல்களில் ஹஜ்ரத்துகள் என்று சிலர் இருப்பார்கள். எல்லார் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும் அவர்களுக்கு அழைப்பு உண்டு. கறி, கோழி என்று அருமையான சாப்பாடு. எந்த வேலையும் கிடையாது. வருவோர் போவோரை ஆசிர்வாதம் பண்ணுவது மட்டும்தான்."

"வெறுமனே சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வளர்த்துக் கொண்டிருந்தால் சும்மா இருக்கத் தோன்றுமா? வணக்கம் சொல்ல வரும் சின்னப் பெண்களிடம் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினை பல இடங்களில் இருக்கிறது. இதனாலேயே இப்போதெல்லாம் ஹஜ்ரத்துகளை அழைத்தால் வீட்டில் மாமிசம் சமைக்காமல் சாதாரண சாப்பாடே செய்கிறோம். அத்தோடு பெண் பிள்ளைகளை அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கத் தனியாக அனுப்புவதில்லை.." சொல்லி முடித்தார். என்னத்த சொல்ல? வீட்டுக்கு வீடு வாசப்படி..///IDHU AVAR KARUTHU INGE ITHAI PODAVEANDIYA AVASIAM ILLAI ,,,

பனித்துளி சங்கர் said...

நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையயே உருட்டுவோம்ல