March 30, 2010

நினைவுகளின் நீரோடையில்.... பத்துப் பெண்கள் - தொடர்பதிவு..!!!

என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது. என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள் ( நன்றி - ஸ்ரீ ). எத்தனை உண்மையான வார்த்தைகள். பெண்கள் எப்போதுமே எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல.. நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். "எனக்குப் பிடித்த பத்து பெண்கள்" என்கிற இந்த தொடர்பதிவை எழுதும்படி எனக்கு அழைப்பு விடுத்த நண்பர் வாசகர் தேவை - எம்.பிரபுவுக்கு மிக்க நன்றி.

நான் ரொம்பவே லேட்டாக இந்த வண்டியில் ஏறுகிறேன் என்று நினைக்கிறேன். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்தத் தலைப்பில் எழுதி விட்டார்கள். அன்னை தெரசா தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை எல்லா பிரபலங்களும் ஏற்கனவே பல நண்பர்களால் குறிப்பிடப்பட்டு விட்ட நிலையில் நான் யாரைப் பற்றி எழுத என்று எனக்குத் தெரியாத காரணத்தால், இடுகையில் ஒரு சின்ன மாற்றத்தை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில்.. நான் கடந்து வந்த பாதையில்.. என்னுள் பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய பெண்களைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கோல் போட வசதியாக கம்பத்தை மாற்றி வைத்ததற்காக ஆட்டத்தின் ரூல்ஸை வடிவமைத்த அம்பயர்கள் என்னை மன்னிப்பீர்களாக..:-)))

திருமதி.சுந்தர்சிங்

நான் படித்த செவன்த் டே பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர். என்றைக்கும் எனது பிரியத்துக்கு உரியவர். தமிழ் மீதான என்னுடைய ஆர்வத்தின் மூலகாரணம் இவர்தான். பள்ளி முதல்வரின் மனைவி என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரோடும் இனிமையாக பழகக் கூடியவர். பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தவர். எனக்கு ஆசிரியை என்பதை விட ஒரு நல்ல, அன்பான மனுஷி.

மீனாட்சி

இந்தப் பெயரை சொல்லும்போதே என் உடம்பில் என்னையும் அறியாமல் ஒரு சின்ன சிலிர்ப்பு ஓடுகிறது. பெயரைத் தவிர மீனாட்சியை பற்றிய எதுவும் எனக்கு நினைவில் இல்லை. அவள் ஆள் உயரமா குட்டையா.. கருப்பா சிவப்பா.. அவள் முகம் எப்படி இருக்கும்? சத்தியமாக எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனால் என்னிடம் கடைசியாக அவள் பேசிப்போன வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

நான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தவள்தான் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பசங்க எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. வீட்டில் இருந்து திருப்பதி சுற்றுலா போனபோது கூட, அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

எந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. "நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..?" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். "நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..?" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். இன்று எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை நினைவிருக்குமா என்று தெரியவில்லை? ஆனால் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இன்று வரை எனக்குள் உயிர்ப்பாகவே இருக்கின்றன.

அய்யனார்

இவளும் என்னுடைய பால்ய கால சினேகிதிதான். நான் சற்றே வளர்ந்து ஏழோ எட்டோ படித்துக் கொண்டிருந்தபோது பழகியவள்.என் பிரியத்துக்குரிய தோழி. வேறுபாடுகள் ஏதுமின்றி என்னோடு விளையாடித் திரிந்தவள் என்றாலும் பெண் என்கிற ஒரு காரணத்தாலேயே என்னிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட மற்றுமொரு அற்புதமான உறவு. சட்டெனத் தோன்றி மறையும் வானவில்லாய் என் வாழ்வில் வந்து காணாமல் போனவள். அய்யனாரும் நானும் ஒன்றாக சுற்றித் திரிந்த நாட்களைத்தான் "ஒரு கிழிஞ்ச சட்டையும் அய்யனாரின்நினைவுகளும் " என்கிற இடுகையாக எழுதி இருக்கிறேன்.

பிருந்தா, அனிதா மற்றும் திவ்யா

கல்லூரியில் என்னோடு படித்தவர்கள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். நான், தேவா, சற்குணம், மற்றும் மனோஜ்... நான்கு ஆண்கள் மற்றும் இந்த மூன்று பெண்கள். இவர்கள் மூவரின் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டே எங்களை "BAD guys" என்று அழைப்பார்கள். எங்கள் துறையில் மொத்தமே பனிரெண்டு பெண்கள்தான். அதுவும் இரண்டாம் வருடத்தில்தான் ஆண்களோடு சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முதலாம் ஆண்டில் பெண்கள் எல்லோருக்கும் தனி செக்சன். யாருக்கும் யாரையுமே தெரியாத நிலையில் கல்லூரியில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அனைவரும் பேருந்தில் ஏறி விட்ட நிலையில், நான் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தபோது, "இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள்" என்று தாங்கள் இருந்த இருக்கையில் என்னை அழைத்து அனிதா உட்கார வைத்ததில் எங்கள் நட்புக்கான விதை தூவப்பட்டது. அந்த சுற்றுலா எங்களுக்குள் நல்ல புரிதலையும், ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணியது.

மூவரில் பிருந்தா ரொம்பவே மெச்சூர்ட் ஆன பெண். பிரச்சினைகள் வரக் கூடிய சமயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவள். தற்போது கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை பார்ப்பதாகக் கேள்வி. (கேள்வியா? ஏன்.. தொடர்பில் இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. பதிலை கடைசியில் சொல்கிறேன்..) அனிதா.. அவளை எப்படி மறக்க முடியும்? ஒரே ஒரு கேள்வியால் என் வாழ்வை புரட்டிப் போட்டவள். பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்கு தீர்மானமாக ஒரு எண்ணம் உண்டு. "என்னுடைய நல்ல தோழிதான் எனக்கு சிறந்த மனைவியாக இருக்க முடியும்.." கோவை ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் வைத்து அனிதா என்னிடம் சொன்ன வார்த்தைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றியது. "ஒரு பொண்ணு கிட்ட தோழின்னு சொல்லி கைய குடுத்த பின்னாடி, எப்படிடா அவள காதலிக்க முடியும்? காதல்னா உடம்பப் பார்க்கும்டா கார்த்தி.. ஆனா நட்பு மனசு சம்பந்தப்பட்டது.. அது காதல விடப் பெரிசு.." நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நான் தெளிந்த நாள் என்று அதை சொல்லலாம். இப்போது அனிதாவுக்கு திருமணம் ஆகி பிரான்சில் இருப்பதாகத் தெரிகிறது. (இதுவும் சரியாத் தெரியாதா.. ஏன் என்றால்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தல..) அமைதி என்றால் அது திவ்யா. ஆனால் ரொம்பவே தைரியசாலி. பார்ப்பதற்கு அனிதாவின் உடன்பிறந்த தங்கை போலவே தோற்றம். இப்போது திருமணம் முடிந்து லண்டனில் இருக்கிறார்.

சரி.. இத்தனை நெருக்கமாக இருந்த மக்களோடு ஏன் இன்று தொடர்புகள் இல்லை? உறவுகள் எல்லாமே திடமாக இருக்கும்.. இருந்தோம்.. அனைவரும் நட்பாக இருக்கும்வரை. அதைக் கொஞ்சம் மீறி ஒரு ஜோடிக்குள் காதல் பிறந்தபோது எங்கள் மொத்த குழுவுமே சிதைந்து போனது. என் உறவோடு நீ ஏன் பேசுகிறாய் என சந்தேகம், நீ செய்வது தப்பு நான் செய்வது சரி என.. ஹ்ம்ம்.. என் வாழ்வில் நான் மறக்க நினைக்கும் காலம் என என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டை சொல்லலாம். எத்தனைக்கு எத்தனை சந்தோஷமாக இருந்தேனோ, அத்தனைக்கு அத்தனை என் நிம்மதியை தொலைத்து திரிந்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவர்களோடு நான் இருந்த நினைவுகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

காதலி (X)

நண்பர்களைப் பிரிந்து நான் தனியனாக சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி இறுதியாண்டு காலத்தில் எனக்கு அறிமுகம் ஆனவள். கோவையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில்தான் முதல் முதலில் அவளை சந்தித்தேன். (நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப் போன ஜாதியும்.. இவளேதான்..) அருமையான பெண். குழந்தை போன்ற மனமுடையவள். ஆரம்பத்தில் விகல்பம் இல்லாமல்தான் பழகி வந்தோம். ஒரு சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் இருவரும் அமர்ந்து இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே மற்றவர் மீது ஈர்ப்பு இருந்ததை அப்போதுதான் அறிந்து கொண்டோம். அவளுடைய பெற்றோருக்கும் என் மீது ஆர்வம் இருந்தாலும் ஜாதி என்னும் ஒரு விஷயம் எங்களின் எல்லா கனவுகளையும் கலைத்துப் போட்டது.

பெற்றோர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விட நிறையவே அழுதாள். எங்காவது போய் விடலாம் என்று கூட சொன்னாள். படிப்பு முடியாத நேரம். பிழைக்க வழி இல்லாத சூழலும், என் குடும்பத்தின் நிலையும் என்னை தடுத்து விட்டன. கல்லூரி முடிந்து நான் கிளம்பியபோது கடைசியாக அவளைப் பார்த்து விடைபெற்றதை.. என் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் அழுததை இன்று நினைத்தாலும் உள்ளம் கதறித் துடிக்கிறது. என் வாழ்வில் நான் தேடித் போன காதல் அவள். அவளுடைய திருமணத்துக்கு அழைப்பு வந்தும் போகவில்லை. அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன?

தோழி (1 )

ஒரு ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் நண்பர்களாக இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு பதிலாக வந்து சேர்ந்த என் பாசத்துக்கு உரிய தோழி. என் அக்காவின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவள். நண்பர்களோடு நடந்த தகராறில் வந்த கோபத்தால் எல்லாப் பெண்களுமே மோசமானவர்கள் என்று நான் உளறிக் கொண்டிருந்த காலம். இப்படி எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று எனது அக்கா சொல்லப் போக "நீ எப்படி பெண்களைப் பற்றி தவறாக சொல்லலாம்? ஆண்கள் ரொம்ப யோக்கியமா..?" என்று கடிதம் எழுதியதுதான் எனக்கும் அவளுக்குமான உறவுக்கு அடிப்படை. எங்களுக்கிடையே இருந்த நல்ல புரிதலின் காரணமாக விரைவிலேயே நண்பர்கள் ஆகிப்போனோம். எல்லோரும் விலகி நின்ற நிலையிலும், என்னையும் ஒரு ஆளாக மதித்து என்னோடு நட்பு பாராட்டிய ஒரு ஜீவன்.

அது செல்போன்கள் வராத காலம். நான் கோவையிலும், அவள் விருதுநகரிலும் இருந்தோம். எல்லாத் தொடர்பும் கடிதங்கள் வாயிலாகத்தான். இன்றைக்கும் அந்தக் கடிதங்களை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். ஒரு பெண் தன் நண்பன் மீது எந்த அளவு நம்பிக்கையும், பாசமும் வைக்க முடியும்? தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக யாரோடும் பழகாமல் ஒதுங்கியே இருக்கக்கூடியவள் என் தோழி. அப்படிப்பட்டவள் என்னோடு சிரித்துப் பேசுவதில் சுற்றி இருந்த மற்ற பெண்களுக்கு ஆச்சரியம். "கார்த்தி கூட பேசுறப்ப மட்டும்தான் நீ சந்தோஷமா இருக்க.. நீ அவன விரும்புறியா..?" கேட்ட பெண்ணுக்கு என் தோழி சொன்ன பதில்.."எனக்கு இந்த உலகத்துல ரொம்பப் புடிச்சது எங்கப்பா.. அதுக்காக அவரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. கார்த்தியையும் நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.. தயவு செஞ்சு அந்த உறவை கொச்சைப்படுத்தாதீங்க.." நீ என் வாழ்வில் கிடைக்க எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்? தற்போது அவளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறாள். இன்று வரை என் மீதான அன்பு குறையாத, எனக்காக கவலைப்படுகிற உனக்கு நான் எப்படி நன்றி சொல்ல முடியும் தோழி?

காதலி (Y)

திண்டுக்கல்லில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னைத் தேடி வந்த காதல். எங்கள் கல்லூரியில் புதிதாக வேலைக்கு வந்து சேர்ந்தவள் அவள். நிரம்பவே கஷ்டப்படும் குடும்பம். எனக்கும் அந்த வலி தெரியும் என்பதால் பல விஷயங்களில் தானாக முன்வந்து அவளுக்கு உதவினேன். அந்தக் கருணையே அவளுக்குள் காதலாக மாறும் என்று நினைக்கவில்லை. ஜூலை மாதத்தின் ஒரு மாலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து தன் காதலைச் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வந்து விட்டேன். ஆனால் அவளைப் பிடித்து இருந்தது.

எனக்கான வாழ்வை என்னுடைய பெற்றோர் தான் அமைத்து தர வேண்டும் என நான் சொலி வந்த நேரத்தில், எங்கே என்னை மீறி காதலில் விழுந்து விடுவோமோ என்று எனக்கு பயம் வந்தது. இரண்டே மாதங்களில் அங்கிருந்து வேலையை மாற்றிக் கொண்டு பெருந்துறைக்குப் போய் விட்டேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது என்பது தெரிந்தால் அவள் மேலும் வருந்தக் கூடும் என்பதால் கடைசிவரை அவளிடம் காரணத்தை சொல்லவே இல்லை. "நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்.. நீங்கள் இருங்கள்" என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவளிடம் இருந்து விலகிப் போனேன். தற்போது ராஜபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் வேலை பார்த்து வருகிறாள். நானாகவே விரும்பி அவளிடம் இருந்து விலகி நிற்கிறேன் என்றாலும் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று வருந்திக் கொண்டிருக்கிறேன் என்றால் அது அவளைப் பிரிந்ததுதான்.

தோழி (2 )

வாழ்வில் ஒரு சில உறவுகள் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்படும். ஆனால் நம் மொத்த வாழ்க்கையையும் ஒரேடியாக திருப்பிப் போட்டு விடும். அப்படிப்பட்ட ஒரு உறவு. கடந்த நான்கு வருடமாகத்தான் எனக்குப் பழக்கம். என்னை தன் விரோதியாக எண்ணிக் கொண்டிருந்தவள். இவனெல்லாம் ஒரு ஆளா என்றெண்ணிய மனிதனை என் எல்லாமே நீதான் என்று அவளே சொல்லுமளவுக்கு வாழ்க்கை மாற்றி விட்டதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சந்தோசம், துக்கம் என எல்லாவற்றிலும் என் கூடவே இருப்பவள். உயிருக்குயிரான தோழி. அதே நேரத்தில் என் பிரியத்துக்குரிய எதிரியும் கூட. என்னை விடவும் என்னை அதிகமாக நேசிப்பவள்.என்னருகே இல்லாதபோதும் எப்போதும் என்னுடனே இருப்பவள். என் குழந்தை என்று தான் அவளை எண்ணிக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் அவளை அம்மா என்றழைப்பதுதான் வழக்கம். அந்த அளவுக்கு என் மீது பாசத்தைப் பொழிபவள். வாழ்வின் கடைசிவரை என் கூட வரும் உறவு. திருமணம் ஆகி கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். இந்த மகிழ்ச்சியும், உறவும் கடைசி வரை வாழ்க்கையில் நிலைத்து இருந்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கையென்னும் டைரியின் ஒரு சில பக்கங்களைத்தான் நான் இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்படாத.. சொல்லப்பட வேண்டிய எத்தனையோ பேர்.. எத்தனையோ விஷயங்கள் உள்ளன. வாழ்க்கை என்பது ஒரு இடுகைக்குள் அடங்கி விடக் கூடிய விஷயமா என்ன? நான் இந்த இடுகையை கிட்டத்தட்ட ஒரு வார காலமாக எழுதி வருகிறேன். ஒவ்வொருவர் பற்றி எழுதும்பொழுதும் காலத்தில் பின்னோக்கி பயணம் செய்பவனாக மீண்டும் ஒரு முறை அந்தத் தருணங்களில் வாழ்ந்து வந்தேன். சந்தோசம், துக்கம், ஆதரவு, வலி என.. அது ஒரு சுகமான அனுபவம். இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பிரபுவுக்கு மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றி.

30 comments:

செ.சரவணக்குமார் said...

அருமை சார்.

பீர் | Peer said...

காதலுக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்கியிருக்கிறீர்கள். Z அடுத்து வருமா?

vasu balaji said...

aahaa. arumai karthik

Joe said...

இந்தளவுக்கு வெளிப்படையாக தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை பதிவர்கள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

வாழ்த்துக்கள் கார்த்திக்.

Joe said...

//
வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள் ( நன்றி - ஸ்ரீ)
//

சாமான்யனாகிய ஒரு ஆணுக்கு பின்னால் கூட ஒரு பெண் பின்னால் தான் நிற்க வேண்டும் என்ற ஆணாதிக்கவாதி ஸ்ரீ ஒழிக! ;-)

வினோத் கெளதம் said...

கார்த்தி வெளிப்படையா சில விஷயங்களை சொன்னதற்க்கு பாரட்டுக்கள்..

சிநேகிதன் அக்பர் said...

அருமை பாஸ்.

Prabu M said...

வெளிப்படையா யதார்த்தமா... ஒரு சுயசரிதத்தின் சில பக்கங்கள் போல.... அழகா அசத்தியிருக்கீங்க நண்பா...
வாழ்த்துக்கள்.... ரொம்ப அழகான அனுபவமா இருந்தது :)

ஜெட்லி... said...

நல்ல வேளை காதலி லிஸ்ட்கலை abcd யில் ஆரம்பிக்கில....

ஜாபர் ஈரோடு said...

பாராட்டுக்கள்

க.பாலாசி said...

அட... தொடர்பதிவில் புதுமை... ஸ்ரீயின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை....

கார்க்கிபவா said...

z வரும். ஆனா அது கல்யாணத்துக்கு அப்புறம். சரியா சகா?

(காலை வாரிடாதிங்க:)))))))

கண்ணா.. said...

ரொம்ப யதார்த்தமா சொல்லிருக்கீங்க கார்த்தி

:)

"உழவன்" "Uzhavan" said...

 
//எனக்கு இந்த உலகத்துல ரொம்பப் புடிச்சது எங்கப்பா.. அதுக்காக அவரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. //
 
கலங்க வச்சிருச்சி நண்பா இந்த வரிகள்

Prabhu said...

சொந்த விபரங்களை இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. சுவாரஸ்யமாக இருந்தது.

மதார் said...

//என் வாழ்வில் நான் மறக்க நினைக்கும் காலம் என என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டை சொல்லலாம். எத்தனைக்கு எத்தனை சந்தோஷமாக இருந்தேனோ, அத்தனைக்கு அத்தனை என் நிம்மதியை தொலைத்து திரிந்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவர்களோடு நான் இருந்த நினைவுகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது//


நிறைய பேருக்கு இறுதியாண்டு இந்த மாதிரிதான் இருக்குமோ ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் . நண்பர்களிடமே புரிதல் இல்லைஎன்றால் யாரை நொந்து என்ன பயன்?
படிச்சு முடிக்கும்போது மனசு ஏதோ கனமா மாறிடுச்சு .

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
அருமை சார்.//

நன்றிங்க..

// பீர் | Peer said...
காதலுக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்கியிருக்கிறீர்கள். Z அடுத்து வருமா?//

ரெண்டே ரெண்டு மட்டும்தானே நண்பா காதலைப் பத்தி சொல்லி இருக்கேன்.. Z பற்றி கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்.. ஹி ஹி ஹி

(கார்க்கி.. நன்றி சகா..)

//வானம்பாடிகள் said...
aahaa. arumai karthik//

நன்றி பாலா சார்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Joe said...
இந்தளவுக்கு வெளிப்படையாக தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை பதிவர்கள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.//

தெரியல நண்பா.. சொல்லணும்னு தோணுச்சு..:-)))

// சாமான்யனாகிய ஒரு ஆணுக்கு பின்னால் கூட ஒரு பெண் பின்னால் தான் நிற்க வேண்டும் என்ற ஆணாதிக்கவாதி ஸ்ரீ ஒழிக! ;-)//

அவர்கிட்ட சொல்றேன்..:-)

//வினோத்கெளதம் said...
கார்த்தி வெளிப்படையா சில விஷயங்களை சொன்னதற்க்கு பாரட்டுக்கள்..//

தாங்க்ஸ் தல..

//அக்பர் said...
அருமை பாஸ்.//

நன்றிங்க..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரபு . எம் said...
வெளிப்படையா யதார்த்தமா... ஒரு சுயசரிதத்தின் சில பக்கங்கள் போல.... அழகா அசத்தியிருக்கீங்க நண்பா...வாழ்த்துக்கள்.... ரொம்ப அழகான அனுபவமா இருந்தது :)//

உங்க தயவுதானே நண்பா.. மறுபடி ஒரு முறை என் வாழ்வை வாழ்ந்து பார்க்கும் வாஇப்பைக் கொடுத்ததற்கு நன்றி தல..

//ஜெட்லி said...
நல்ல வேளை காதலி லிஸ்ட்கலை abcd யில் ஆரம்பிக்கில....//

சேட்டை..:-))))

// jaffer erode said...
பாராட்டுக்கள்//

நன்றி ஜாபர்.. என்னப்பா கொஞ்ச நாளா ஆளையே காணோம்?\

//க.பாலாசி said...
அட... தொடர்பதிவில் புதுமை... ஸ்ரீயின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை....//

:-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// கார்க்கி said...
z வரும். ஆனா அது கல்யாணத்துக்கு அப்புறம். சரியா சகா?(காலை வாரிடாதிங்க:)))))))//

அதேதான் தல..”சுறா”வளி கிளம்பிருச்சு போல? பட்டையைக் கிளப்ப வாழ்த்துகள்..

//கண்ணா.. said...
ரொம்ப யதார்த்தமா சொல்லிருக்கீங்க கார்த்தி :)//

நன்றிப்பா..

//"உழவன்" "Uzhavan" said...
கலங்க வச்சிருச்சி நண்பா இந்த வரிகள்//

எனக்கு இது தெரிய வந்தபோது அழுதுட்டேன் நண்பா..

//pappu said...
சொந்த விபரங்களை இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. சுவாரஸ்யமாக இருந்தது.//

நம்ம வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு திறந்த புத்தகம்தான் பப்பு.. அதன் இருண்ட பக்கங்களை மட்டும் தான் இன்னும் மறைச்சு வச்சிருக்கேன்..

//மதார் said...
நிறைய பேருக்கு இறுதியாண்டு இந்த மாதிரிதான் இருக்குமோ ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் . நண்பர்களிடமே புரிதல் இல்லைஎன்றால் யாரை நொந்து என்ன பயன்?படிச்சு முடிக்கும்போது மனசு ஏதோ கனமா மாறிடுச்சு .//

உங்களுக்கும்? ஹ்ம்ம்..:-(((((((((

வெற்றி said...

அந்த காதலி(x) மேட்டரை படிக்கும் போது ரொம்ப வலிச்சது நண்பா..வீட்டில எப்படியாவது நீங்க கன்வின்ஸ் பண்ணிருக்கலாம்..அவரின் வார்த்தைகள் எனக்குள் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியது..

பிரச்னை என் காதலிலும் வந்தது..எங்க வீட்டில கொஞ்சம் சாமர்த்தியமா பேசி ஓகே வாங்கிட்டேன்..அவங்க வீட்டில பேசுறதுதான் பாக்கி..

வெற்றி said...

கல்லூரி இறுதியாண்டு நிஜமாவே மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டதாக உள்ளது..அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெற்றி said...
அந்த காதலி(x) மேட்டரை படிக்கும் போது ரொம்ப வலிச்சது நண்பா..வீட்டில எப்படியாவது நீங்க கன்வின்ஸ் பண்ணிருக்கலாம்..அவரின் வார்த்தைகள் எனக்குள் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியது..//

இப்போது இருக்கும் தைரியம் அப்போது இல்லாமல் போய் விட்டது வெற்றி..:-(((

/பிரச்னை என் காதலிலும் வந்தது..எங்க வீட்டில கொஞ்சம் சாமர்த்தியமா பேசி ஓகே வாங்கிட்டேன்..அவங்க வீட்டில பேசுறதுதான் பாக்கி..//

எல்லாம் நல்லபடியா நடக்க வாழ்த்துகள்..

//வெற்றி said...
கல்லூரி இறுதியாண்டு நிஜமாவே மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டதாக உள்ளது..அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் :)//

என்சாய்..

தருமி said...

//நானாகவே விரும்பி அவளிடம் இருந்து விலகி நிற்கிறேன் என்றாலும் //

இது 'கமா'தானே .. 'புல்ஸ்டாப்' இல்லியே?

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
இது 'கமா'தானே .. 'புல்ஸ்டாப்' இல்லியே?//

ஐயா.. முடிஞ்சது முடிஞ்சு போச்சு.. கதம் கதம்..

மேவி... said...

நீங்க செய்த பல ஜில்மாக்களையும் நேர்மையாக சொல்லிருக்கலாம் ........


லேசா லேசா பட கதை போல் ஒரு லைன் ஓடுதுன்னு கேள்வி பட்டேனே ?????


பதிவு நன்று.

Anonymous said...

very good post sir......i liked it much......this is ur best among all posts:)

குமரை நிலாவன் said...

//எனக்கு இந்த உலகத்துல ரொம்பப் புடிச்சது எங்கப்பா.. அதுக்காக அவரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. //

கலங்க வச்சிருச்சி நண்பா இந்த வரிகள்



நினைவுகளை,நிகழ்வுகளை
பகிர்ந்துள்ளீர்கள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
நீங்க செய்த பல ஜில்மாக்களையும் நேர்மையாக சொல்லிருக்கலாம் ........
லேசா லேசா பட கதை போல் ஒரு லைன் ஓடுதுன்னு கேள்வி பட்டேனே//

நான் ரொம்ப நல்லவன்னு சொன்னா நம்புங்கப்பா..

// Anonymous said...
very good post sir......i liked it much......this is ur best among all posts:)//

நன்றி.. ஆனா யாருன்னு பேர் சொல்லி இருக்கலாமே..

//குமரை நிலாவன் said...
லங்க வச்சிருச்சி நண்பா இந்த வரிகள்
நினைவுகளை,நிகழ்வுகளை
பகிர்ந்துள்ளீர்கள் நண்பா//

நன்றி தல..

Rajesh Ramraj said...

u can even tell about 10 male ppl... :( very sad ;)