August 28, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (2)

கோணங்கி என்றொரு மாயாவி (1)

பின்னிரவு நேரத்தில் சாத்தூரின் அந்த மொட்டை மாடியில், நீள் பாலை நிலத்தின் திசைகளெங்கும் இலக்கற்று சுற்றித்திரியும் சூறாவளிக் காற்றாய், கோணங்கியுடனான நேசனின் உரையாடல் பல்வேறு தளங்களைத் தொட்டுச் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவர்கள் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததும் அதிசயம். அவர்களின் சம்பாஷணையை நண்பர்கள் அனைவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம்.

தஞ்சை பெரிய கோவிலில் தான் கண்ட சிற்பங்களைப் பற்றிய சில தகவல்களை சொல்லும்போது நேசனின் கண்களில் ஆச்சரியம் பொங்கி வழிந்தது. அத்தனை நுட்பமாக.. கோனார்க், கஜூராகோ போன்ற கோயில்களில் பார்க்கக்கூடிய சிற்பங்களுக்கு இணையான வேலைப்பாடுகள் தஞ்சையிலும் இருக்கின்றனவாம். அவருடைய விவரணையில் எண்ணற்ற சிற்பங்கள் எங்கள் கண்முன்னே அரூப வடிவாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஆயிரமாயிரம் கொலைகள் செய்தவன் என்று ராஜராஜன் மீது தனக்கு கோபம் இருந்தாலும், கோவிலைப் பற்றியச் செப்பேட்டில் அதைக் கட்டியவர்களைப் பற்றிய குறிப்பையும் சேர்த்து, இவர்களைக் கொண்டு இந்தக் கோயிலை "எடுப்பித்தேன் " என்று சொன்ன அவனுடைய பண்பைத் தான் ரசிப்பதாகவும் நேசன் சொன்னார். அதன் நீட்சியாக, நாயக்க அரசர்களின் சார்பாக திருச்சியை ஆண்ட தளபதிகள் பற்றியும், அது தொடர்பான புதினங்கள் பற்றியும் பேச்சு தொடர்ந்தது.




பின்பு எங்கெங்கோ ஓடியாடித் திரிந்த உரையாடல் தற்கால தமிழ் எழுத்துச் சூழலைப் பற்றித் திரும்பியது. இன்றைய தமிழ் எழுத்தும் எழுத்தாளர்களும் முற்றிலும் வணிகரீதியாக மாறிப் போய் விட்டதைப் பற்றிய வருத்தம் நண்பர்களால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டது. எழுத்து என்பது தானாக தோன்ற வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலத்துக்குள் எழுதித் தர வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்போது உண்மையான எழுத்து என்பது தொலைந்து போய் அங்கே வெறும் சொற்களின் கூடாரம் மட்டுமே இருக்கும் என்பதே அனைவரின் எண்ணமுமாக இருந்தது. இந்த நேரத்தில் நேசன் சொல்லிய கருத்து மிக முக்கியமானது. "இன்றைய எழுத்தாளர்கள் ஒரு கைப்பிடி அரிசியைக் கொண்டு ஒரு அண்டா சோறு சமைக்கிறார்கள்". எத்தனை சரியான வார்த்தைகள்?

"வணிக விதிகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியாக எழுதித் தள்ளும்போது ஒரு எழுத்தாளன் தன்னுடைய சொற்களையும் வார்த்தைகளையும் தொலைக்கத் தொடங்குகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனுடைய எழுத்துக்களின் ஜீவன் தொலைந்து போக கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகிறான். இதை விட வருத்தமான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அதேபோல இன்று படைப்புகளை முன்னிறுத்துவதைக் காட்டிலும் தங்களை முன்னிறுத்துவதில்தான் எழுத்தாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்" என்ற மிகக்கூரான விமர்சனம் நேசனால் முன்வைக்கப்பட்டபோது அதை யாராலும் மறுக்கமுடியவில்லை.

"பத்துப் பக்கங்களைத் தொடர்ச்சியாக படித்தும் வெறும் பத்து வரிகளை மட்டுமே ஒருவனால் நினைவில் நிறுத்த முடியுமானால் அத்தனை பக்கங்களுக்கு அங்கே என்ன தேவை இருக்கிறது? மாறாக, இத்தகையதொரு சூழலில்தான் கோணங்கி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். அவருடைய எழுத்துகளைப் படிப்பதென்பது ஒரு முப்பரிமாணக் கண்ணாடியினால் உற்று நோக்குவதற்கு ஒப்பாகும். கண்ணாடியின் ஒரு பக்கம் இருக்கும் எழுத்துக்கள் மறுபக்கம் பல்வேறு வண்ணங்களாக தெறித்துச் சிதறுகின்றன. பல புதிய தளங்களுக்கு வாசிப்பவர்களைத் தூக்கி அடிக்கின்றன. அதனாலேயே கோணங்கியின் எழுத்துக்களை நான் காதலிக்கிறேன்" என்று சொல்லி முடித்தார் நேசன்.



இந்த நேரத்தில்தான் தன்னுடைய எழுத்து எப்படி உருவாகிறது என்பதை கோணங்கி சொன்னார். எழுத வேண்டும் என்கிற முனைப்போடு அமரும்போது எழுத்து அவருக்கு வசப்படாதாம். ஒரு அரை பக்கம் எழுத.. பின்பு காலாற நடந்து செல்ல வேண்டியது. திரும்ப வந்து முதலில் இருந்து எழுதத் தொடங்கினால் ஒரு பக்கத்தைக் கூடத் தாண்ட முடியாதாம். இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என்று சட்டை பேன்ட் அணிந்து கிளம்பி விடுவாராம்.

ஆனால் மிகச்சரியாக வெளியேறும் நேரத்தில் எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென்று எண்ணங்கள் கோர்வையாக ஓடத் தொடங்குமாம். உடனே மனிதர் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விடுவாராம். எழுத்து தன்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ள வெளியே போக வேண்டியதை மறந்து தொடர்ச்சியாக எழுதி.. இப்படியாக தன்னையே ஏமாற்றி ஏமாற்றித்தான் எழுத வேண்டியிருக்கிறது என்றார் கோணங்கி. சிறுபிள்ளை விளையாட்டு போன்றதொரு உணர்வோடு இதைச் சொல்லி முடித்தபோது கோணங்கியின் கண்களில் வழிந்தோடிய சாந்தத்தையும் நேசபாவத்தையும் பார்த்தபோது அவரை என்னுடைய மனதுக்கு இன்னும் நெருக்கமானவராக உணர முடிந்தது.

அங்கிருந்து உரையாடலின் திசை சற்றே மாறி கவிதைகளை நோக்கித் திரும்பியது. கவிதைகளைப் பற்றிய சுவாரஸ்யமான விவாதங்கள், அண்ணன் மாதவராஜ் எழுப்பிய முக்கியமான கேள்விகள், கோணங்கியின் வித்தியாசமான அனுபவங்கள் என இன்னும் நிறைய விஷயங்கள்.. அடுத்த இடுகையில்..

12 comments:

Mohan said...

உங்களுடைய விவரனை மிகவும் நன்றாக இருக்கிறது. கோணங்கியோட 'பாழி' வாங்கிவைச்சுட்டு அட்டைப்படத்தை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்:-)

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

சம்பாஷணை"

இம்புட்டு சிரமபட்டு இந்த வார்த்தய எழுதனுமா. தமிழ் உங்கள மாதிரி
நவீன சித்தய்ங்களால றெக்க கட்டி பறக்கும்.

இந்த மாதிரி வார்த்தைகள போட்டு எழுதுனாத்தான் நாமளும் புரட்சி எழுத்தாளய்ங்க வரிசைல துண்டு போட முடியும்னு பலபேரு நினைக்கிறாய்ங்க.

sakthi said...

நல்லதொரு சந்திப்பு இவர்களின் உரையாடல் மூலம் நிறைய விடயங்களை கற்று உணர்ந்திருப்பீர்கள்

வாழ்த்துக்கள் பாண்டியன்

Unknown said...

ரெண்டு பதிவுகளும் படித்தேன். நன்றாக இருந்தது.கோணங்கியின் கதைகள் படித்து சிலாகித்து உள்ளேன்.இதைப் பற்றிய பதிவும் ஒன்றும் பிப்-10 எழுதி உள்ளேன்.

இவர் எழுத்தில் ஏன் தி.ஜாவின் தாக்கம் தெரிகிறது.

http://raviaditya.blogspot.com/2010/02/blog-post_06.html

ஆதவா said...

சின்னப் பதிவாகப் போய்விட்டது எனும் வருத்தத்தைத் தவிர வேறேதுமில்லை!!! தொடர்ந்து எழுதுங்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mohan said...
உங்களுடைய விவரனை மிகவும் நன்றாக இருக்கிறது. கோணங்கியோட 'பாழி' வாங்கிவைச்சுட்டு அட்டைப்படத்தை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்:-)//

நன்றிப்பா.. அதெல்லாம் புரிஞ்சுக்க நாம இன்னும் நிறைய வாசிக்கணும் நண்பா..:-)))

//ஒரிஜினல் "மனிதன்" said...
சம்பாஷணை"இம்புட்டு சிரமபட்டு இந்த வார்த்தய எழுதனுமா. தமிழ் உங்கள மாதிரி நவீன சித்தய்ங்களால றெக்க கட்டி பறக்கும்.//

ஏங்க.. மொத்த பத்தியிலையும் நிறைய தடவை உரையாடல்ங்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இருக்கோமேங்கிறதுனால அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன்.. மத்தபடி நான் எழுதுறது ரொம்ப சாதாரண மொழிதானுங்க..

//இந்த மாதிரி வார்த்தைகள போட்டு எழுதுனாத்தான் நாமளும் புரட்சி எழுத்தாளய்ங்க வரிசைல துண்டு போட முடியும்னு பலபேரு நினைக்கிறாய்ங்க//

என்னோட மத்த இடுகைகளையும் படிச்சுட்டு சொல்லுங்க நண்பா..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

// sakthi said...
நல்லதொரு சந்திப்பு இவர்களின் உரையாடல் மூலம் நிறைய விடயங்களை கற்று உணர்ந்திருப்பீர்கள்
வாழ்த்துக்கள் பாண்டியன்//

கண்டிப்பாக தோழி..:-))

//கே.ரவிஷங்கர் said...
ரெண்டு பதிவுகளும் படித்தேன். நன்றாக இருந்தது.கோணங்கியின் கதைகள் படித்து சிலாகித்து உள்ளேன்.இதைப் பற்றிய பதிவும் ஒன்றும் பிப்-10 எழுதி உள்ளேன்.//

வாசிக்கிறேன் ரவி சார்..

//இவர் எழுத்தில் ஏன் தி.ஜாவின் தாக்கம் தெரிகிறது.//

எனக்கு அந்தளவுக்கு கோணங்கியின் எழுத்து பரிச்சயம் இல்லை சார்.. இருக்கலாம்..

//ஆதவா said...
சின்னப் பதிவாகப் போய்விட்டது எனும் வருத்தத்தைத் தவிர வேறேதுமில்லை!!! தொடர்ந்து எழுதுங்கள்!!//

மொத்தத்தையும் எழுதுனா ஒரு ஒண்ணே முக்கால் பதிவு வரும் ஆதவ்.. அதான் ரெண்டா ஒடச்சுட்டேன்..

Joe said...

முதல் பகுதி ரொம்ப அருமையா இருந்ததுன்னு சொல்றதுக்குள்ள அடுத்த இடுகை எழுதிட்டீங்க.
நேசனுடன் மதுரை சந்திப்பிலும் கோணங்கி பற்றி நீங்கள் பேசியது நினைவிருக்கிறது.

ரொம்ப சுவாரஸ்யமாக, விரிவாக, ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!

a said...

சந்திப்பை நன்றாக விவரித்துரிக்கிறீர்கள்..........

மேவி... said...

இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நான் போன் பண்ணும் போது சொல்ல மாட்டீங்களே ....


இதெல்லாம் இருக்கட்டும், நீங்க இன்னும் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்" part 3 எழுதவில்லை (இலக்கியவாதின்ன சொன்ன சொல் தவற கூடாது)

கார்த்திகைப் பாண்டியன் said...

//Joe said...
முதல் பகுதி ரொம்ப அருமையா இருந்ததுன்னு சொல்றதுக்குள்ள அடுத்த இடுகை எழுதிட்டீங்க. நேசனுடன் மதுரை சந்திப்பிலும் கோணங்கி பற்றி நீங்கள் பேசியது நினைவிருக்கிறது.//

நன்றி ஜோ.. அவருடைய எழுத்துக்களில் இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அவற்றின் வடிவத்தால் நிறைய பேரைச் சென்றடைய முடிவதில்லை என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது..

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
சந்திப்பை நன்றாக விவரித்துரைக்கிறீர்கள்..........//

நன்றிங்க..

// டம்பி மேவீ said...
இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நான் போன் பண்ணும் போது சொல்ல மாட்டீங்களே ....இதெல்லாம் இருக்கட்டும், நீங்க இன்னும் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்" part 3 எழுதவில்லை (இலக்கியவாதின்ன சொன்ன சொல் தவற கூடாது)//

மறக்க மாட்டீங்களே.. அதை எழுதுற எண்ணம் இல்ல நண்பா..:-))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//பின்னிரவு நேரத்தில் சாத்தூரின் அந்த மொட்டை மாடியில், நீள் பாலை நிலத்தின் திசைகளெங்கும் இலக்கற்று சுற்றித்திரியும் சூறாவளிக் காற்றாய், கோணங்கியுடனான நேசனின் உரையாடல் பல்வேறு தளங்களைத் தொட்டுச் சென்று கொண்டிருந்தது.//

:-OOOOOOOOOO